பெங்களூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் மூன்றாவது நாள் அன்று மழை பெய்யுமா? அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்குமா? என்பதை பற்றி பார்க்கலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாக கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது. இந்திய வீரர்கள் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் பிட்ச்சை பயன்படுத்தி வீசிய ஸ்விங் பந்துகளில் தடுமாறி வரிசையாக விக்கெட்களை இழந்தனர்.

46 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி அபாரமாக ஆடி இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்து இருக்கிறது. இந்த நிலையில் மழையால் மட்டுமே இந்த போட்டியில் இந்திய அணிக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று (அக்டோபர் 18) அதிக மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. காலை நேரத்தில் வெப்பம் 27 டிகிரி செல்சியஸ் என்பதாக இருக்கும். காலையில் மழைக்கான வாய்ப்பு 25 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால், நூறு சதவீதம் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மேகமூட்டமான சூழ்நிலையில் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய வாய்ப்பு உள்ளது.
மதிய நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானிலை அறிக்கையின் படி மதியம் 67 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாலை நேரத்தில் 25 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர மழையால் இந்திய அணிக்கு பெரிய சாதகம் ஏதுமில்லை என தெரிய வருகிறது.