பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் ஐந்தாம் நாளான இன்று (அக்டோபர் 20) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி 107 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டிவிடலாம் என எண்ணிக் கொண்டு இருக்கும் நிலையில் மழை அந்த அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்து இருக்கிறது.
ஐந்தாம் நாள் அன்று கணிக்கப்பட்டு இருக்கும் மழையால் இந்த போட்டி டிராவில் முடிவடையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த அளவுக்கு மழை பெய்யும் அதனால் போட்டி நிறுத்தப்படுமா? என்பது பற்றி பார்க்கலாம்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது. இரண்டாவது நாளன்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
அடுத்து முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 42 ரன்கள் சேர்த்தது. அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்துக்கு 107 ரன்கள் என்ற சிறிய வெற்றி இலக்கை நிர்ணயம் செய்து இருக்கிறது. ஐந்தாம் நாள் முழுமையாக இருப்பதால் நியூசிலாந்து அணி இந்த இலக்கை எளிதாக எட்டி விடும் என்ற எண்ணமே அனைவருக்கும் உள்ளது.
அதே சமயம் ஐந்தாம் நாள் அன்றும் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. வானிலை அறிக்கையின்படி காலை 9 மணி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. 9:00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சராசரியாக 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனினும். இடையே சில மணி நேரம் மழை நிற்கும். இடைவிடாமல் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது போட்டி சில மணி நேரங்கள் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இடையே நிச்சயமாக சில ஓவர்களாவது போட்டி நடைபெறும் என்பது தெரிகிறது. அதை நியூசிலாந்து அணி பயன்படுத்த திட்டமிடும். 107 ரன்கள் என்ற இலக்கை விரைவாக எட்டவே நியூசிலாந்து முயற்சிக்கும்.
சமீபத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்க இருந்த டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களும் மழையால் கைவிடப்பட்டது. அது போல இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய ஐந்தாம் நாள் முழுவதும் மழையால் கைவிடப்படுமா? என்ற கலக்கத்தில் நியூசிலாந்து உள்ளது. ஆனால், 20 ஓவர்கள் போட்டி நடந்தாலே நியூசிலாந்து அணிக்கு போதுமானதாக இருக்கும்.
ஓவருக்கு 5 ரன்கள் என்ற அளவில் எடுத்தால் கூட 20 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிவிடலாம். எனவே, மழை மிக அதிகமாக பெய்து இந்த நாள் முழுவதும் போட்டி நடைபெறாமல் போனால் மட்டுமே இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடையும். 20 ஓவர் போட்டி நடந்தாலும் கூட நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.