பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சுப்மன் கில் இடத்தில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்திய பிளேயிங் லெவனில் சுப்மன் கில் சேர்க்கப்படாதது ஏன், சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் 2வது நாள் ஆட்டம் திட்டமிட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு பதிலாக நட்சத்திர வீரரான சர்ஃபராஸ் கான் இடம்பிடித்துள்ளார். அதேபோல் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கொண்டு வரப்பட்டுள்ளார்.
பெங்களூர் மைதானத்தின் 4வது இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு அதிக உதவி கிடைக்கும். இதன் காரணமாக ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் என்பது கூறப்பட்டது.
சுப்மன் கில்லின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது, சுப்மன் கில் மட்டும் எந்தவித பயிற்சியும் செய்யாமல் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அதேபோல் சர்ஃபராஸ் கான் ஸ்லிப் திசைக்கான ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போதே சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் தான் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடி சுப்மன் கில்லுக்கு பதிலாக இளம் வீரர் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். இராணி கோப்பையில் மும்பை அணிக்காக களமிறங்கி சர்ஃபராஸ் கான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் விளாசியது பயிற்சியாளர் கவுதம் கம்பீரை வெகுவாக ஈர்த்தது.
இதன் காரணமாகவே நேரடியாக சுப்மன் கில் இடத்தில் விளையாடும் வாய்ப்பை சர்ஃபராஸ் கான் பெற்றுள்ளார். இந்தப் போட்டியிலும் சர்ஃபராஸ் கான் தனது திறமையை நிரூபித்தால், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் நிச்சயம் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.