ராய்ப்பூர்: இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 208 ரன்கள் குவித்தும், இந்திய அணி அந்த இலக்கை மிக எளிதாக எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், இந்திய அணிக்கு எவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பது பற்றி பேசி இருக்கிறார்.
இந்தப் போட்டி போட்டி முடிந்த பிறகு வர்ணனையாளர்கள், "இந்திய அணியைத் தோற்கடிக்க எவ்வளவு ரன்கள் அடித்தால் போதுமானதாக இருக்கும்?" என்று சான்ட்னரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், "இவர்களுக்கு எதிராகவா? எனக்குத் தெரிந்து 300 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார். இது நகைச்சுவையாகக் கூறப்பட்டாலும், இந்திய பேட்டிங் வரிசையின் வலிமையை இது காட்டுவதாக அமைந்தது.

தொடர்ந்து பேசிய அவர், "மிகச் சிறந்த ஆடுகளத்தில், பேட்டிங் ஆழம் கொண்ட ஒரு அணியை எதிர்கொள்ளும்போது இப்படித்தான் நடக்கும். இந்திய அணி முதல் பந்திலிருந்தே அதிரடி காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்குகிறது. அணியில் உள்ள ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அடித்து ஆடுவதற்கான முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது" என்று இந்திய அணியின் அணுகுமுறையைப் பாராட்டினார்.
"எங்களைப் பொறுத்தவரை, இனிவரும் போட்டிகளில் 200 அல்லது 210 ரன்கள் அடித்தால் மட்டும் போதாது என்பதை உணர்ந்து கொண்டோம். இன்னும் அதிரடியாக விளையாடி கூடுதல் ரன்களைக் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதேசமயம் பந்துவீச்சில் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்க வேண்டும்" என்று சான்ட்னர் தெரிவித்தார்.
அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், "உலகக்கோப்பைத் தொடர் வரவிருப்பதால், அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் தான் வீரர்களைச் சுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம். இந்தப் போட்டியில் நாங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானோம். இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் மீண்டு வருவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக ஆடுகளத்தின் தன்மை மற்றும் தனது பேட்டிங் குறித்துப் பேசிய அவர், "நான் 7வது இடத்தில் களமிறங்குவதால் ரன் குவிக்க வேண்டியது அவசியம். இங்கு மைதானம் மிக வேகமாக இருந்தது. அதேசமயம் பனிப்பொழிவு இருந்ததால் பந்துவீசுவது சவாலாக இருந்தது. ஒரு சுழற்பந்து வீச்சாளராகப் பந்தைப் பிடித்து வீசுவது கடினமாக இருந்தது. ஆனால் இது போன்ற சூழலுக்குப் பழகிக்கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாகச் செயல்படுவோம்" என்று கூறினார்,
பேட்டிங்கில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 27 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.