ராய்பூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி ராய்ப்பூரில் உள்ள எஸ்விஎன்எஸ் (SVNS) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ராய்ப்பூரில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காண்போம்.
டாஸ் முக்கியத்துவம்: இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே சிறந்த முடிவாக இருக்கும்.
பனிப்பொழிவு: ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக அமையும். பந்து வீச்சாளர்கள் பந்தை பிடித்து வீசுவதற்கு சிரமப்படுவார்கள் என்பதால், பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவிக்க முடியும்.
சுழற்பந்து வீச்சு: ராய்ப்பூர் ஆடுகளம் சற்று வேகம் குறைந்ததாக (Slow Wicket) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. பந்து ஆடுகளத்தில் பட்டு மெதுவாக வருவதால், அதிரடி ஆட்டக்காரர்கள் கணித்து ஆடுவது சவாலாக இருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் ஸ்கோர்: ராய்ப்பூர் மைதானத்தில் இது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியாகும். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தவரை, முதலில் பேட்டிங் செய்யும் அணி 160 முதல் 180 ரன்கள் வரை குவிக்க வாய்ப்புள்ளது. பனிப்பொழிவு மற்றும் ஆடுகளத்தின் மந்தமான தன்மை ஆகியவை ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதில் இளம் வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். வெறும் 35 பந்துகளில் 84 ரன்கள் குவித்த அவர், அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார். அவருக்கு உறுதுணையாக ரிங்கு சிங் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் குவிக்க, இந்திய அணி 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இது நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோராகும்.
முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும், இந்திய அணியில் சில முக்கிய வீரர்களின் ஆட்டத்திறன் கவலையளிக்கும் வகையில் உள்ளது. 2026 டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில், வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
குறிப்பாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது பழைய அதிரடி ஆட்டத்திற்கு திரும்ப வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாட முயற்சி செய்தாலும், அவரிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் அந்த ஆக்ரோஷமான ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை.
அதேபோல், சுப்மன் கில்லுக்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். இஷான் கிஷனும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதால், இந்த போட்டியில் அவர்கள் தங்களை நிரூபிப்பது அவசியமாகும்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை, கிளென் பிலிப்ஸ் மட்டுமே நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடினார். அவர் 40 பந்துகளில் 78 ரன்கள் குவித்தது அந்த அணிக்கு ஆறுதலான விஷயமாகும். பின் ஆலன் மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோரின் வருகை நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அந்த அணியின் பந்துவீச்சு இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது.