ராய்ப்பூர்: ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் என்ற இமால இலக்கை எட்டிப்பிடித்து நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம் மற்றும் அணியின் செயல்பாடு குறித்து வெளிப்படையாக பேசினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 208 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய போது இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். கேப்டன் சூர்யகுமார் 34 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 15.2 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி வென்றது.

வெற்றிக்குப் பின் இஷான் கிஷனின் ஆட்டம் குறித்துப் பேசிய சூர்யகுமார், "இஷான் கிஷன் மதிய உணவிற்கு என்ன சாப்பிட்டார் அல்லது போட்டிக்கு முன் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ஒருவர் களமிறங்கி இப்படி அதிரடியாக விளையாடி நான் பார்த்ததே இல்லை. பவர் பிளே முடிவதற்குள் அணியின் ஸ்கோரை 70 ரன்களுக்குக் கொண்டு சென்றது நம்பமுடியாத விஷயம். 200 ரன்களைத் துரத்தும்போது பேட்ஸ்மேன்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்" என்று வெகுவாகப் பாராட்டினார்.
தொடர்ந்து இஷான் கிஷன் உடன் அமைத்த கூட்டணி குறித்துப் பேசிய அவர், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பவர் பிளே ஓவர்களில் இஷான் கிஷன் எனக்குப் பேட்டிங் செய்ய வாய்ப்பே தரவில்லை. அது எனக்குச் சற்று கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் பரவாயில்லை, அவர் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். எனக்குப் பந்துகள் கிடைத்தபோது, நானும் எனது பங்களிப்பைச் சரியாகச் செய்தேன். இறுதியில் நாங்கள் நினைத்தபடியே ஆட்டம் அமைந்தது" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
நியூசிலாந்து அணியைக் கட்டுப்படுத்தியது குறித்துப் பேசிய கேப்டன், "எதிரணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைக் கடந்திருந்தபோது, அவர்கள் எப்படியும் 225 முதல் 230 ரன்கள் வரை குவிப்பார்கள் என்று நினைத்தோம். நாக்பூர் போட்டியிலும் இதுவே நடந்தது. ஆனால் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் சிவம் துபே ஆகியோர் மிகச் சிறப்பாகப் பந்துவீசினர். பனிப்பொழிவு இருந்தபோதும் அவர்களை 208 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது பந்துவீச்சாளர்களின் கூட்டு முயற்சியாகும்" என்றார்.
தனது ஆட்டம் மற்றும் அணியின் மனநிலை குறித்துப் பேசிய சூர்யகுமார், "நான் வலைப்பயிற்சியில் நன்றாகவே விளையாடி வந்தேன். குடும்பத்தினருடன் செலவிட்ட விடுமுறை நாட்கள் எனக்குப் புத்துணர்ச்சி அளித்தன. தற்போது அணியின் சூழல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எதிரணி யாராக இருந்தாலும், எந்தச் சூழலாக இருந்தாலும் பயமில்லாமல் அதிரடியாக விளையாடும் இந்த முறையைத் தொடர்ந்து கடைபிடிப்போம்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.