இந்தூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது. 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ள நிலையில், இந்தூரில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றப்போவது இந்தியாவா? அல்லது நியூசிலாந்தா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடித்தும் இந்தியா தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சு சொதப்பல் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில், பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியான இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்தூர் ஹோல்கர் மைதானம் என்றாலே அது பவுலர்களுக்குச் "சுடுகாடு", பேட்ஸ்மேன்களுக்கு "பூங்காவனம்" தான். அந்தளவுக்கு இங்கு ரன்கள் எளிதாக கிடைக்கும். இங்குள்ள ஆடுகளம் மிகவும் தட்டையாகவும், கடினமாகவும் இருப்பதால் பந்து பேட்டிற்கு நன்றாக வரும். பவுன்ஸ் சீராக இருக்கும்.
கடைசியாக இங்கு நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முறையே 399/5 மற்றும் 385/9 என இமாலய ஸ்கோர்களைக் குவித்துள்ளது. சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரே 292 ரன்கள் ஆகும்.
இங்கு இதுவரை நடந்த 7 ஒருநாள் போட்டிகளில், 5 முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. சேஸிங் செய்வது இங்கு கொஞ்சம் கடினம் தான். ஆட்டத்தின் பிற்பகுதியில் பந்து பழையதாகும் போது, ஸ்பின்னர்களுக்குச் சிறிதளவு கைக்கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதனால், டாஸ் வெல்லும் கேப்டன் யோசிக்காமல் பேட்டிங்கைத் தேர்வு செய்தால் பாதி கிணற்றைத் தாண்டியது போலத்தான்.
ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்தப்போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பே இல்லை. மழை வாய்ப்பு 1% மட்டுமே. வானம் தெளிவாக இருக்கும். வெப்பநிலை சுமார் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இப்போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவும் முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கே சாதகமாக அமையும்.
இந்த மைதானம் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அதிரடி வீரர்களுக்கு எளிதாக ரன் குவிக்கும் மைதானம். ஏற்கனவே தொடர் சமனில் இருப்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும். நிச்சயம் 300 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செல்லும் என்பதால், ரசிகர்களுக்கு ஒரு "ரன் விருந்து" காத்திருக்கிறது.
வானிலை மற்றும் பிட்ச் நிலவரத்தைப் பார்த்தால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு 80% அதிகம். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.