இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 38 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் ஒருநாள் தொடரை இழந்து (2-1) வரலாற்றுத் தோல்வியை சந்தித்துள்ளது. விராட் கோலி தனி ஆளாகப் போராடி சதம் அடித்தும், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி செய்த தவறுகளால் வெற்றி கைநழுவிப் போனது. இந்தியா ஏன் தோற்றது? ஆட்டத்தின் போக்கை மாற்றிய அந்த 5 முக்கிய காரணங்கள் என்ன? என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
டாஸ் வென்று பந்துவீசிய இந்தியாவுக்கு ஆரம்பம் சிறப்பாகவே இருந்தது. 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை திணறடித்தனர். ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டாரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டத்தை இந்தியாவின் கையிலிருந்து பறித்தனர். இந்த ஜோடி 219 ரன்கள் குவித்து இமாலய ஸ்கோருக்கு வித்திட்டது. இவர்கள் செட்டில் ஆன பிறகு, அவர்களைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை. மிடில் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முதல் காரணமாக அமைந்தது.

இந்தூர் போன்ற பேட்டிங் பிட்சில் 338 ரன்களை சேஸ் செய்வது கடினமல்ல. ஆனால் அதற்கு வலுவான தொடக்கம் தேவை. ரோகித் சர்மா (11), சுப்மன் கில் (23), ஸ்ரேயாஸ் ஐயர் (3), கே.எல். ராகுல் (1) என அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தபோதே இந்தியாவின் பாதி நம்பிக்கை சிதைந்தது.
கேப்டனாக சுப்மன் கில்லின் அனுபவமின்மை இந்த போட்டியில் வெளிப்படையாகத் தெரிந்தது. மிட்செல் - பிலிப்ஸ் அதிரடி காட்டியபோது, பந்துவீச்சாளர்களை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் திணறினார். குறிப்பாக, குல்தீப் யாதவை மிகத் தாமதமாகவே பந்துவீச அழைத்தார். அதற்குள் பேட்டர்கள் நன்கு செட்டிலாகி இருந்ததால், குல்தீப் ஓவரில் ரன்கள் பறந்தது. இக்கட்டான நேரத்தில் சரியான ஃபீல்டிங் செட் அப் இல்லாததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
'சேஸிங் கிங்' விராட் கோலி தனது வேலையைச் சரியாகச் செய்தார். தனி ஆளாகப் போராடி 124 ரன்கள் குவித்தார். ஆனால் அவருக்குத் துணையாக நின்று பார்ட்னர்ஷிப் அமைக்க, முன்வரிசை மற்றும் நடுவரிசை பேட்டர்கள் யாரும் இல்லை. இளம் வீரர்களான நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இறுதியில் போராடினாலும், முக்கிய பேட்டர்கள் கைவிட்டதால் சுமை முழுவதும் கோலி மீதே விழுந்தது. ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பினிஷர் இல்லாத குறையும் தென்பட்டது.
இந்திய அணியின் ஃபீல்டிங் இந்தத் தொடர் முழுவதுமே சுமாராகத் தான் இருந்தது. முக்கியக் கட்டங்களில் கேட்சுகளைத் தவறவிட்டதும், மிஸ்பீல்டிங் செய்ததும் நியூசிலாந்து அணிக்கு கூடுதல் ரன்களை வழங்கியது. மறுபுறம் நியூசிலாந்து அணி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தை உண்டாக்கினர். சிறப்பாக பந்து வீசிய கிறிஸ்டியன் கிளார்க், ஃபால்க்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
சொந்த மண்ணில் புலி என்று வர்ணிக்கப்படும் இந்திய அணி, நியூசிலாந்திடம் சரணடைந்திருப்பது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.