கவுஹாத்தி: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி கவுஹாத்தியில் நடைபெற உள்ளது. நாக்பூர் மற்றும் ராய்ப்பூரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அசைக்க முடியாத பலத்துடன் உள்ளது. குறிப்பாக இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் என அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 2026 டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில், இந்திய அணியின் இந்தச் செயல்பாடு ரசிகர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று, இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

மறுபுறம், நியூசிலாந்து அணிக்கு இது மிக முக்கியமான போட்டியாகும். ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவிய அந்த அணி, இன்றைய போட்டியில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும். எஞ்சிய போட்டிகளில் சுவாரஸ்யம் இருக்க வேண்டுமென்றால், நியூசிலாந்து அணி இன்று வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
கவுஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் பொதுவாகப் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவே இருக்கும். இங்குப் பந்து பேட்டிற்கு நன்றாக வரும் என்பதால், பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி ரன்களைக் குவிக்க முடியும். இந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்கப்படுவதை வழக்கமாகப் பார்க்கலாம். எனவே, இன்றைய போட்டியும் ரசிகர்களுக்கு ஒரு ரன் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தவரை, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த முடிவாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்து ஒரு இமாலய இலக்கை நிர்ணயிப்பதன் மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பர்சபரா மைதானம் பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியமாக இருக்கும் என்பதால், சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அதிகம் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.