மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முதன்மை வேகப் பந்துவீச்சாளர் பும்ரா நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இந்திய அணி இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறது. முதல் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா விளையாடினர். இரண்டாவது போட்டியில் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா வேகப்பந்துவீச்சாளர்களாக செயல்பட்டனர். இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் களம் இறக்க முடிவு செய்தால் நிச்சயமாக அது முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது.

பும்ராவுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்படக்கூடும். ஏனெனில், அவர் அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறார். அதற்கு முன் அவருக்கு சிறிய ஓய்வு அளிக்க வேண்டும் என்பதால் மூன்றாவது போட்டியின் போது அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம்.
முகமது சிராஜ் அந்த காரணத்திற்காகவே இரண்டாவது போட்டியில் ஓய்வில் இருந்தார். அதே போல பும்ராவுக்கு மூன்றாவது போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம். ஒருவேளை இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் அவசியம் என நினைத்தால் பும்ரா நிச்சயமாக விளையாடுவார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். அதே சமயம் முதல் நாள் வேகப்பந்து வீச்சுக்கும் ஒத்துழைக்கும். அதன் அடிப்படையில் இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க சிறிய வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் மட்டுமே பும்ரா விளையாடுவார்.
மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கினால் வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு மாற்று சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. எனவே, அவர்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இருந்து விடுவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணியின் விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் (அல்லது) பும்ரா.