விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி தனது பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தி அளவில் ரன் குவித்தது. துவக்க வீரர் டிம் சீஃபர்ட் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 216 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், அவரது முடிவைச் சோதிக்கும் வகையில் நியூசிலாந்து துவக்க வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோர் அதிரடி ஆட்டம் ஆடினர். விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்ததை இருவரும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவிக்கப்பட்டது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் இந்தக் கூட்டணியைப் பிரிக்க முடியவில்லை. முதல் விக்கெட்டிற்கு வெறும் 50 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்த பிறகு, டெவோன் கான்வே 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் தூணாக நின்ற விக்கெட் கீப்பர் டிம் சீஃபர்ட், இந்தியப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ஹர்ஷித் ராணா மற்றும் ரவி பிஷ்னோய் ஓவர்களில் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 62 ரன்கள் விளாசினார். இந்தத் தொடரில் அரைசதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
126 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் நியூசிலாந்து சற்றுத் தடுமாறியது. ரச்சின் ரவீந்திரா (2), கிளென் பிலிப்ஸ் (24) மற்றும் மார்க் சாப்மேன் (9) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் ரிங்கு சிங் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முக்கிய 4 கேட்சுகளைப் பிடித்து அசத்தினார்.
விக்கெட்டுகள் விழுந்தாலும், கடைசி நேரத்தில் டேரில் மிட்செல் ஆட்டத்தை கையில் எடுத்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்த அவர், வெறும் 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாக ஜக்கரி பவுல்க்ஸ் 6 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். கடைசி 5 ஓவர்களில் நியூசிலாந்து அணி அதிரடியாக ரன் குவித்ததால் ஸ்கோர் 200ஐ கடந்தது.
இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஓரளவுக்கு ரன்களைக் கட்டுப்படுத்தினர். ஆனால் ஹர்ஷித் ராணா 4 ஓவர்களில் 54 ரன்களையும், ரவி பிஷ்னோய் 49 ரன்களையும் வாரி வழங்கி ஏமாற்றம் அளித்தனர்.