விசாகப்பட்டினம்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில், இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சிவம் துபே தனி ஆளாகப் போராடி அதிரடியாக விளையாடிய போதிலும், மற்ற வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் இந்திய அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோர் இந்தியப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 100 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது. கான்வே 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் டிம் சீஃபர்ட் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் டேரில் மிட்செல் 18 பந்துகளில் 39 ரன்கள் விளாச, நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
216 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. கடந்த போட்டியின் நாயகன் அபிஷேக் சர்மா, முதல் பந்திலேயே ஆட்டமிழந்து, டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 24 ரன்களிலும் வெளியேறினர். அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஹர்திக் பாண்டியாவும் 2 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஜோடி அணியை மீட்கப் போராடியது. ரிங்கு சிங் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் சிவம் துபே ருத்ரதாண்டவம் ஆடினார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்த அவர், சிக்ஸர் மழை பொழிந்தார்.
வெறும் 23 பந்துகளை மட்டுமே சந்தித்த சிவம் துபே 3 பவுண்டரிகள் மற்றும் 7 இமால சிக்ஸர்களுடன் 65 ரன்கள் விளாசினார். அவர் களத்தில் இருந்தவரை இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆனது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
சிவம் துபே ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளைையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேக்கப் டஃபி மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசிப் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.