
ராயுடு - விஜய் கூட்டணி
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது ஜோடி சேர்ந்த அம்பதி ராயுடு - விஜய் ஷங்கர் பொறுப்பாக ஆடினர். இருவரும் 98 ரன்கள் சேர்த்து அணியை ஓரளவு நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர்.

குழப்பத்தில் ரன் அவுட்
31.5வது ஓவரில் விஜய் ஷங்கர் பந்தை தட்டி விட்டு, ரன் ஓட முன்னேறி வந்தார். ஆனால், மறுபுறம் இருந்த அம்பதி ராயுடு பந்து எங்கே செல்கிறது என பார்த்து விட்டு தாமதமாகவே ஓட ஆரம்பித்தார். அவர் ஓடுகிறாரா இல்லையா என்ற குழப்பத்தில் பொறுமையாக ஓடி வந்த விஜய், ரன் அவுட் ஆனார்.

முதல் அரைசதம் நழுவியது
இந்த போட்டியில் மிகவும் அழுத்தமான சூழ்நிலையில், களமிறங்கி சிறப்பாக ஆடி வந்த விஜய் ஷங்கர், ரன் அவுட் மூலம் தன் முதல் ஒருநாள் போட்டி அரைசதத்தை தவறவிட்டார்.

ராயுடு சதம் நழுவியது
விஜய் ஷங்கருக்கு இந்த போட்டியில் அதிர்ஷ்டமில்லை என்பது போல அவரது ரன் அவுட்டுக்கு ஒரு வகையில் காரணமான அம்பதி ராயுடு 90 ரன்களில் ஆட்டமிழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.
வாய்ப்பு கிடைக்குமா?
விஜய் ஷங்கர் இந்த போட்டியில் அரைசதம் அடித்து இருந்தால் அது அவரை தொடர்ந்து ஒருநாள் அணியில் இடம் பெறச் செய்ய காரணமாக இருந்திருக்கும். எனினும், இந்த போட்டியில் அவர் பேட்டிங் செய்த விதம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருக்கு தொடர்ந்து ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்குமா?


Click it and Unblock the Notifications
