வதோதரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றதற்கு விராட் கோலி ஒரு காரணம் என்றால், கடைசி நேரத்தில் "கூலாக" நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்த கே.எல். ராகுல் மற்றொரு முக்கிய காரணம். இந்நிலையில், ராகுலின் இந்த ஆட்டத்தைப் பார்த்து வியந்துபோன முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, அவரை ஜாம்பவான் தோனியுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
இந்தப் போட்டியில் 301 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி, ஒரு கட்டத்தில் 242 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. களத்தில் கே.எல். ராகுல் இருக்க, அவருடன் இளம் வீரர் ஹர்ஷித் ராணா இணைந்தார். பின்னர் காயம் காரணமாக அவதிப்பட்ட வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். இந்த இக்கட்டான சூழலில், கே.எல். ராகுல் அவசரப்பட்டு சிக்ஸர் அடிக்க முயற்சிக்காமல், மிகவும் நிதானமாகச் செயல்பட்டார்.

ராகுலின் இந்த முதிர்ச்சியான ஆட்டம் குறித்து ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "கே.எல். ராகுலை நாம் ஒரு அதிரடி ஆட்டக்காரராகத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் போட்டியில் அவர் அணுகிய விதம் முற்றிலும் மாறுபட்டது. ஹர்ஷித் ராணா மற்றும் காயம் அடைந்த சுந்தருடன் ஆடும்போது, அவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டார்.
வழக்கமாக அவர் அடித்து ஆடக்கூடிய பந்துகளைக் கூட தட்டிவிட்டு சிங்கிள் எடுத்தார். கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு சென்றார். கடைசி ஓவர்களில் அவர் வெளிப்படுத்திய அந்த நிதானம், அப்படியே எம்.எஸ். தோனியைப் போலவே இருந்தது. தோனியைப் போலவே பதற்றமில்லாமல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்" என்று புகழ்ந்து தள்ளினார்.
மேலும் ராகுலின் பன்முகத்தன்மை குறித்துப் பேசிய சோப்ரா, "ராகுலிடம் உள்ள மிகப்பெரிய நல்ல விஷயமே அவர் எந்த வேலையே கொடுத்தாலும் செய்வதுதான். அவரை ஓப்பனிங் இறங்கச் சொன்னாலும் ஆடுவார், கீப்பிங் செய்யச் சொன்னாலும் செய்வார், கேப்டனாக இருக்கச் சொன்னாலும் இருப்பார். அவர் செய்யாதது பந்துவீச்சு மட்டும்தான்; அது ஒன்றுதான் பாக்கி. நவீன கிரிக்கெட்டில் மிகவும் கடினமான வேலை 'ஃபினிஷர்' ரோல் தான். அதை ராகுல் கச்சிதமாகச் செய்கிறார்" என்று பாராட்டினார்.
கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், 49-வது ஓவரில் தான் ராகுல் தனது கியரை மாற்றினார். அடுத்தடுத்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி, 29 ரன்களுடன் (நாட் அவுட்) இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இக்கட்டான நேரத்தில், தோனியைப் போல கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு சென்று முடித்த ராகுலின் இந்த ஆட்டம் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.