மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக என்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்பது கிடையாது என இளம் நட்சத்திர வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைத்தாலும் அது மிகப்பெரிய விஷயம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
துலீப் டிராபி, இராணி கோப்பை மற்றும் ரஞ்சி டிராபி என்று தொடர்ச்சியாக 4 போட்டிகளில் விளையாடி 4 சதங்களை விளாசி அசத்தியுள்ளார் அபிமன்யூ ஈஸ்வரன். தொடக்க வீரராக களமிறங்கி நிதானமாக விளையாடக் கூடிய வீரராக உள்ள அபிமன்யூ ஈஸ்வரன், இரு முறை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் வங்கதேச டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் பிளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதன்பின் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அவரது இடத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அபிமன்யூ ஈஸ்வரன் பேசுகையில், கிரிக்கெர் மீது கொண்ட காதல் காரணமாக இந்த விளையாட்டை விளையாட தொடங்கினோம் என்பதை பல நேரங்களில் நாம் நினைவூட்ட வேண்டிய சூழல் வரும். சில நேரங்களில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத போது சோகமாக இருக்கும். ஆனால் என் அருகில் ஏராளமான நல்ல மனிதர்கள் சூழ்ந்துள்ளனர்.
அவர்களுடன் ஆலோசிப்பதன் மூலமாக, அந்த அழுத்தத்தில் இருந்து வெளியில் வந்துவிடுவேன். இந்திய அணிக்காக விளையாடி ஏராளமான வெற்றிகளை பெற வேண்டும் என்பதே கனவு. ஆனால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவது நமது கைகளில் இல்லை. அதனால் இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என்பதில் அதிக எனர்ஜியை கொடுக்க தேவையில்லை. நாம் கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சவாலான விஷயமாகும். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் தான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். அதனால் இந்திய பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக பேட்டிங் ஸ்டைலிலோ அல்லது அணுகுமுறையிலோ மாற்றம் செய்ய தேவையில்லை. அதனால் இப்போது எந்த வாய்ப்பு கிடைத்தாலும் சிறப்பாக செயல்பட தயாராகி வருகிறேன்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணியுடன் இந்தியா ஏ அணி சார்பாக விளையாடவுள்ளோம். மிகப்பெரிய தொடர்களுக்கு முன்பாக அதே மைதானங்களில் விளையாட வாய்ப்பு கிடைப்பது எளிதான விஷயமல்ல. அந்த சூழலில் விளையாடி நாம் தயாராகி கொள்ள முடியும். அந்த பிட்சில் ஒரு முறை விளையாடினால் கூட அது நமக்கு கூடுதல் சாதகம் தான் என்று தெரிவித்துள்ளார்.