கவுஹாத்தி: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். அதே சமயம் அவரது குருவான யுவராஜ் சிங்கின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை 2 பந்துகளில் தவறவிட்டார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவர், இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடி வெறும் 14 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.
நியூசிலாந்து அணி நிர்ணயித்த 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மின்னல் வேகத் துவக்கம் அளித்தார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 14 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ஆட்டத்தின் 6வது ஓவரில் ஜேக்கப் டஃபி வீசிய கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்டி அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றார்.
இந்திய அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக யுவராஜ் சிங் வெறும் 12 பந்துகளில் அரைசதம் அடித்தார். அந்தச் சாதனை இன்றும் முறியடிக்கப்படாமல் உள்ளது. அவருக்கு அடுத்தபடியாகத் தற்போது அபிஷேக் சர்மா 14 பந்துகளில் இந்தச் சாதனையைச் செய்துள்ளார்.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா உள்ளார். அவர் 2025ஆம் ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
சர்வதேச அளவில் அதிவேக அரைசதம் அடித்த உலக சாதனை நேபாள வீரர் திபேந்திர சிங் ஐரி வசம் உள்ளது. 2023ஆம் ஆண்டு மங்கோலியா அணிக்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் வெறும் 9 பந்துகளில் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துத் தனது ரன் வேட்டையைத் தொடங்கிய அபிஷேக் சர்மா, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மொத்தம் 20 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 340 ஆக இருந்தது.
அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 154 ரன்கள் என்ற இலக்கை வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மறுமுனையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அவருக்குச் சிறந்த ஒத்துழைப்பு அளித்தார்.