கவுகாத்தி: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெறும் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உட்பட 68 ரன்கள் குவித்தார்.
போட்டி முடிந்த பின்பு தனது பேட்டிங் அணுகுமுறை குறித்துப் பேசிய அபிஷேக் ஷர்மா, “இதை தான் அணி நிர்வாகம் என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறது. அதை நான் களத்தில் செயல்படுத்துகிறேன். ஆம், தொடர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்ப்பது சுலபமில்லை. மனதில் நம்பிக்கையுடன் தைரியமாக இருந்தால் அணி வீரர்கள் உதவியுடன் சாதிக்க முடியும்” என்றார்.

யுவராஜ் சிங்கின் 12 பந்து அரை சதத்தை உடைப்பது முடியாத காரியம் என ஒப்புக்கொண்ட ஷர்மா, “ஆனால் யாருக்கு தெரியும். எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார். மேலும், “இத்தொடரில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் நன்றாக விளையாடுகிறார்கள். அடுத்த போட்டி நல்ல பொழுதுபோக்காக அமையும் என நினைக்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிக்ஸர் அடிக்கும் தன் பாணி குறித்து அபிஷேக் விளக்கினார், “நான் முதல் பந்தில் இருந்தே சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. என்ன தோன்றுகிறதோ, அதை செய்ய முயற்சி செய்கின்றேன். பவுலர்கள் என்னை ஆட்டமிழக்க வைக்க நினைக்கலாம். அதை கணித்து தயாராகி விளையாடுவேன்” என்றும் கூறினார்.
“நான் இறங்கி வந்து ரன்கள் அடிப்பது ஏன் என்று பலரும் கேட்கிறார்கள். பில்டிங்கில் கேப் இருப்பதை பார்த்து தான் நான் இறங்கி வந்து அடிக்கின்றேன். பில்டிங் நெருக்கடியாக நிறுத்தப்பட்டு இருந்தால் நிச்சயமாக என்னால் இறங்கி வந்து அடிக்க முடியாது. நான் பில்டிங் செட் அப் இருக்கு ஏற்ற வகையில் தான் என்னுடைய பேட்டிங்கை விளையாடுகின்றேன்” என அபிஷேக் ஷர்மா விளக்கமளித்தார்.