புனே: 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர், இதுவரை 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வாஷிங்டன் சுந்தர், 2வது இன்னிங்ஸில் இதுவரை மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்களை குவித்தது. இதில் இந்திய அணியின் இளம் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒரு இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவே முதல்முறையாகும்.

இதனால் வாஷிங்டன் சுந்தருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. பின்னர் 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது.
இந்த இன்னிங்ஸில் இதுவரை வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலமாக ஒரே போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணிக்கு வாஷிங்டன் சுந்தர் கம்பேக் கொடுத்துள்ளார். கம்பேக் போட்டியிலேயே வாஷிங்டன் சுந்தர் இதுவரை 11 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார்.
இதன் மூலமாக 2010ஆம் ஆண்டுக்கு பின் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 2வது ஆஃப் ஸ்பின்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அஸ்வினுக்கு பின் வாஷிங்டன் சுந்தர் அசத்தலாக பவுலிங் செய்து வருவதால், நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜடேஜா, அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் புனே மைதானத்தின் பிட்சில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு தடுமாறி வரும் சூழலில், வாஷிங்டன் சுந்தர் ஒற்றை வீரராக இந்திய அணியை தாங்கி பிடித்துள்ளார். நாளைய ஆட்டத்தின் முதல் செஷனிலும் வாஷிங்டன் சுந்தர் சில விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை போட்டியாக இந்த ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.