மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு மிக அருகில் இருந்தது. 147 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வீரர்கள் துரத்தினர். ஒரு கட்டத்தில் ரிஷப் பண்ட் களத்தில் நின்று அபாரமாக விளையாடி வந்த நிலையில் இந்தியா வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஏஜாஸ் பட்டேல், ரிஷபன்ட் களத்தில் இருக்கும் வரை நாங்கள் அனைவரும் பயந்து நடுங்கியதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவுக்கு எதிரான தொடரில் நாங்கள் அனைவரும் ரிஷப் பண்ட் விக்கெட்டுக்கு மிகவும் குறியாக இருந்தோம். ஏனென்றால் அவர் கொஞ்சம் கூட பயப்படுவதில்லை. களத்தில் நிற்கும் போது அவருடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
சூழல் எவ்வாறு இருந்தாலும் நான் களத்தில் இருக்கும் வரை நான் என்ன நினைக்கிறேனோ அதை தான் நான் செய்வேன். ஆட்டம் இருந்தாலும் பரவாயில்லை என்ற உத்வேகத்தில் பண்ட் விளையாடி வருகிறார். இதனால் அவர் களத்தில் இருக்கும் வரை எங்களுக்கு பயமாகவே இருந்தது என்று ஏஜாஸ் பட்டேல் கூறியுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏஜாஸ் பட்டேல், ஆஸ்திரேலிய களம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது நமக்கு எந்த ஒரு சாதகமும் இல்லாமல் இருக்கும். மனதளவில் புதிய உத்வேகத்துடன் நாம் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்கனவே பல இந்திய வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள்.
இது அவர்களுக்கு கை கொடுக்கும். நிச்சயமாக இந்திய அணிக்கு அழுத்தம் இருக்கும். ஆனால் வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் சகஜம்தான். எனவே இந்திய அணி வீரர்கள் நம்பிக்கையுடன் இருந்து செயல்பட்டால் நிச்சயமாக இங்கு நடந்த தோல்வியிலிருந்து மீள முடியும் என்று ஏஜாஸ் பட்டேல் கூறியுள்ளார்.