ராய்ப்பூர்: ராய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரிலேயே மோசமான சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட நியூசிலாந்து துவக்க வீரர் டெவோன் கான்வே, அர்ஷ்தீப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம் 18 ரன்கள் விளாசப்பட்டது.

இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் முதல் ஓவரிலேயே அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற விரும்பத்தகாத சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். முன்னதாக 2022ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமார் முதல் ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். தற்போது அர்ஷ்தீப் சிங் அந்தச் சாதனையை சமன் செய்துள்ளார்.
முதல் ஓவரில் தான் சொதப்பினார் என்றால், அவர் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரிலும் நியூசிலாந்து வீரர்கள் விட்டுவைக்கவில்லை. அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் டிம் சீஃபர்ட், அர்ஷ்தீப் வீசிய அந்த ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விரட்டினார். அந்த ஓவரிலும் 18 ரன்கள் கசியவிடப்பட்டது. ஆகமொத்தம் தனது முதல் 2 ஓவர்களிலேயே அர்ஷ்தீப் சிங் 36 ரன்களை வாரி வழங்கியது இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.
13 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்து உள்ளது. அர்ஷ்தீப் சிங் மோசமாக வீசினாலும் குல்தீப் யாதவ் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தங்கள் சுழல் பந்துவீச்சால் ஆட்டத்தை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிறப்பான துவக்கம் கண்ட நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளைச் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையாக வீழ்த்தினர். அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே 19 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டிம் சீஃபர்ட் 24 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் வெளியேறினார். ரச்சின் 44 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 19 ரன்களிலும் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினர்.