அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் மீது அர்ஷ்தீப் சிங் பந்தை எறிந்தார். இதனால் போட்டியில் தேவையற்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், மைதானத்தில் அரங்கேறிய இந்த மோதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. என்ன நடந்தது?
இந்திய அணி நிர்ணயித்த 256 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 11வது ஓவரில் இந்த சம்பவம் நடைபெற்றது. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் நேராக அடித்தார். பந்தை பிடித்த அர்ஷ்தீப் சிங், ஸ்டம்பை நோக்கி பந்தை வீசுவதாக நினைத்து தேவையில்லாமல் மிட்செல் மீது பலமாக வீசினார். பந்து மிட்செலின் தொடையில் பட்டது.

இதனால் கடும் கோபமடைந்த மிட்செல், அர்ஷ்தீப் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆடுகளத்தில் சற்று பதற்றம் நிலவிய நிலையில், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் உடனடியாக தலையிட்டு நிலைமையைச் சமாளித்தார். மிட்செல்லிடம் சென்று பேசி அவரை சமாதானப்படுத்தினார். அதன் பின்னர் அர்ஷ்தீப் சிங் தான் செய்த தவறுக்காக மிட்செலிடம் மன்னிப்பு கேட்டார். இருவரும் களத்திலேயே கைக்குலுக்கிக் கொண்டதால் பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வந்தது.

இந்த இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2016 இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்ததும், 2021 இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் எடுத்ததுமே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது அந்த இரண்டு பேரின் சாதனையையும் சாம்சன் முறியடித்துள்ளார்.

இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகிய மூவருமே அரைசதம் அடித்தனர். டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
