சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலிருந்து மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நீக்கப்பட்டது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த விவகாரத்தில் தேர்வுக்குழுவின் மனவோட்டம் என்னவாக இருக்கும் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், ஷமியின் நீக்கம் தனக்கு எவ்வித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். "ஷமி அணியில் சேர்க்கப்படாதது எதிர்பார்த்த ஒன்றுதான். இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. ரோஹித் சர்மா, விராட் கோலிக்கும் ஷமிக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது."
"அவர்கள் ஒருநாள் போட்டியில் ஆடாவிட்டாலும், டெஸ்ட் அல்லது டி20 எனத் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஷமி காயம் காரணமாக நீண்ட காலம் வெளியில் இருந்தார். ஒரு பேட்ஸ்மேனையும், வேகப்பந்து வீச்சாளரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது" என்று அஸ்வின் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "ஒரு வேகப்பந்து வீச்சாளரைப் பொறுத்தவரை அவரது ரன்-அப் வேகம், ரிதம் மற்றும் பந்துவீச்சின் தரம் பழையபடி உள்ளதா என்பதைத் தேர்வுக்குழு கூர்ந்து கவனிக்கும். பேட்ஸ்மேனை விட பவுலருக்குப் பணிச்சுமை அதிகம்.
முக்கியமாக, 2027 உலகக்கோப்பைத் தொடர் வரை முகமது ஷமியால் முழு உடற்தகுதியுடன் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் தேர்வுக்குழுவினருக்கு இருக்கலாம். அதனால் அவர்கள் எதிர்காலத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கலாம்" என்றார்.
முகமது ஷமியின் நிலை குறித்துப் பேசிய அஸ்வின், "நான் மட்டும் ஷமியின் இடத்தில் இருந்திருந்தால், என்னை ஒரு துரதிர்ஷ்டசாலி என்றே நினைத்திருப்பேன். ஷமியின் தரம் குறித்துத் தேர்வுக்குழுவுக்குச் சந்தேகம் இல்லை."
"ஆனால், கடந்த 6 மாத கால நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவர்கள் ஷமியைத் தாண்டி அடுத்தக்கட்டத்திற்குச் சென்றுவிட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் இனி ஷமியை எதிர்காலத் திட்டத்தில் வைத்திருக்க வாய்ப்பில்லை" என்று அஸ்வின் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பையில் ஷமி சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், அஸ்வினின் இந்தக் கருத்து ஷமியின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.