சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் திறமையான வீரர்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதாகக் கூறி முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஓரங்கட்டப்படுவது குறித்துச் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகத்தின் இந்த முடிவு தவறானது என்றும், இது வீரரின் நம்பிக்கையைச் சிதைக்கும் என்றும் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் விளாசியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இது குறித்து அணி நிர்வாகம் கூறுகையில், "அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா தொடருக்குத் தயாராக, ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் போதிய ஆட்ட அனுபவம் தேவை. அதற்காகவே இந்தச் சுழற்சி முறை" என்று விளக்கம் அளித்தது.
நிர்வாகத்தின் இந்த விளக்கத்தை அஸ்வின் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பேசுகையில், "ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கொடுப்பது சரிதான். ஆனால் அர்ஷ்தீப் சிங் நிலைமையை யார் யோசிப்பார்கள்? அவர் ஏற்கனவே தன்னை நிரூபித்தவர்.
அர்ஷ்தீப் இப்போது என்ன நினைப்பார்? 'நான் இவ்வளவு சாதித்தும் இன்னும் என் இடத்திற்காகப் போராட வேண்டுமா?' என்ற விரக்தி அவருக்கு வரும். நீண்ட நாட்கள் பெஞ்சில் அமர வைத்துவிட்டு, திடீரெனக் களமிறக்கினால் அவர் துருப்பிடித்தது போல இருப்பார். பந்துவீச்சு என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். இப்படிச் செய்தால் அந்த நம்பிக்கை போய்விடும்" என்று அஸ்வின் ஆதங்கப்பட்டார்.
தொடர்ந்து பேசிய அஸ்வின், "ஏன் எப்போதுமே பவுலர்களுக்கு மட்டும் இந்த நிலைமை வருகிறது? பேட்ஸ்மேன்களுக்கு இப்படி நடப்பதில்லையே. முக்கிய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆடுகிறார்கள், ஆனால் முக்கிய பவுலர்கள் மட்டும் காரணம் சொல்லப்பட்டு உட்கார வைக்கப்படுகிறார்கள்" என்று கேள்வி எழுப்பினார்.
"நானும் இதே சூழ்நிலையில் இருந்திருக்கிறேன். அந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் நான் அர்ஷ்தீப் சிங்கிற்காகச் சண்டை போடுகிறேன். அவர் எப்போதெல்லாம் பந்துவீசுகிறாரோ, அப்போதெல்லாம் விக்கெட் எடுத்துத் தருகிறார். அவர் தலைநிமிர்ந்து அணியில் இடம்பெற வேண்டியவர். அவருக்கு இந்த நிலைமை வரக்கூடாது" என்று அஸ்வின் உருக்கமாகப் பேசினார்.
வரும் 3-வது ஒருநாள் போட்டியில் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கும் அஸ்வின், "இப்போது சேர்த்து என்ன பயன்? முதல் இரண்டு போட்டிகளில் அவரை ஓரங்கட்டிய போதே அவரது தன்னம்பிக்கை குறைந்திருக்கும். பிப்ரவரி 7-ல் டி20 உலகக்கோப்பை வருகிறது. அதற்கு முன் அவருக்குத் தொடர் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்" என்று தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.
கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து அர்ஷ்தீப் சிங் டி20 போட்டிகளில் கூட நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறுவது குறிப்பிடத்தக்கது.