அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றிக்குப் பின்னால் அணிக்குள் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக, பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டதால் கோபமடைந்த அக்சர் பட்டேலிடம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மன்னிப்பு கேட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராகத் திகழும் அக்சர் பட்டேல், உலகக் கோப்பைத் தொடரில் சில போட்டிகளில் விளையாடவில்லை. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், சூப்பர் எட்டு சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் அவர் விளையாடும் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவால் அக்சர் பட்டேல் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்துள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த ஒரு அனுபவமிக்க வீரர் என்பதால், அவர் கோபப்படுவதில் முழு நியாயம் இருப்பதாகச் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேலிடம் நேரில் சென்று தான் மன்னிப்பு கேட்டதாகத் தெரிவித்துள்ளார். "நான் அவரிடம் சென்று, இது என்னுடைய தவறுதான் என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால், அணியின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று விளக்கினேன். அது மிகவும் கடினமான ஒரு உரையாடலாக அமைந்தது.'
"எனினும், அவர் நிலைமையைப் புரிந்துகொண்டார். அடுத்த நாளே நாங்கள் இது குறித்துச் சுமூகமாகப் பேசினோம்," என்று சூர்யகுமார் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, அடுத்தடுத்த வாழ்வா சாவா போட்டிகளில் அக்சர் பட்டேல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.
மேலும் அணியின் புதிய அணுகுமுறை குறித்துப் பேசிய சூர்யகுமார், தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றியே முக்கியம் என்ற மனநிலையை வீரர்களிடம் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். அரையிறுதிப் போட்டி வரை இந்திய அணி வீரர்கள் யாரும் அதிக ரன்கள் அல்லது அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னிலையில் இல்லை.

ஆனால், ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இந்த புதிய கலாச்சாரத்தை அணியில் விதைத்து தற்போது அதற்கான முழு பலனையும் அடைந்துள்ளோம் என்று சூர்யகுமார் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
