துபாய்: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல், நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது காயத்தால் அவதிப்பட்டார். இந்திய அணி முதலில் பந்து வீசியபோது, 35-வது ஓவரை அக்சர் படேல் வீசினார். நியூசிலாந்து அணி நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தது.
அந்த ஓவரின் போது அக்சர் படேலுக்கு கையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர், அடுத்த ஓவருக்கு முன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் முதல் உதவி சிகிச்சைகளை அளித்தார். அதன் பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் அக்சர் படேல் ஆடுகளத்துக்கு உள்ளே வந்தார். எனினும் அவர் பேட்டிங் செய்வாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் அக்சர் படேல் முக்கியத்துவம் பெற்று இருக்கிறார். ஐந்தாம் வரிசையில் அவர் பேட்டிங் செய்து வருகிறார். கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு முன்னதாக அக்சர் படேல் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்வது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அவர் ஐந்தாம் வரிசையில் இந்திய அணிக்கு தேவையான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு கையில் காயம் இருப்பதால், அவர் பேட்டிங் செய்வாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் அவர் மீண்டும் வந்து பந்து வீசியது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துபாய் ஆடுகளத்தில் சேசிங் செய்வது கடினமானது என்பதால் இந்த முடிவை அந்த அணி எடுத்தது. ஆனால், அந்த அணி விக்கெட்களை இழந்ததோடு, இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் ரன் குவிக்க முடியாமல் திணறியது. நியூசிலாந்து அணி 165 ரன்களுக்குள் சுருண்டது. முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டம் இழந்து இருந்தனர்.