நாக்பூர்: நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், போட்டியின் நடுவே நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் படேல் மைதானத்தை விட்டு வெளியேறியது ரசிகர்களிடையே சிறு பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர் தனது ஓவரை முழுமையாக வீசாமலே பாதியிலேயே வெளியேறியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்குத் தயாராகும் வகையில், ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த அக்சர் படேல் மீண்டும் அணிக்குத் திரும்பினார். ஆனால், நாக்பூர் போட்டியில் பந்துவீசும்போது அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது.

நியூசிலாந்து அணி சேஸிங் செய்தபோது, ஆட்டத்தின் 16வது ஓவரை அக்சர் படேல் வீசினார். அந்த ஓவரின்போது நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல், அக்சர் படேல் வீசிய பந்தை மிக வேகமாக ஸ்ட்ரைட் டிரைவ் அடித்தார். அந்தப் பந்து தன்னை நோக்கி மின்னல் வேகத்தில் வந்ததால், அக்சர் படேல் அதைத் தனது இடது கையை நீட்டித் தடுக்க முயன்றார்.
துரதிர்ஷ்டவசமாகப் பந்து அவரது இடது கை ஆள்காட்டி விரலில் பலமாகத் தாக்கியது. பந்து தாக்கிய வேகத்தில் விரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. வலியால் துடித்த அவரால் மேற்கொண்டு பந்துவீச முடியவில்லை. காயம் காரணமாக அக்சர் படேல் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் பாதியிலேயே சென்றதால், அந்த ஓவரின் மீதமுள்ள பந்துகளை அபிஷேக் சர்மா வீசினார். இந்தப் போட்டியில் அக்சர் படேல் வெளியேறும் முன் 3.3 ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
அக்சர் படேலுக்கு ஏற்பட்டது விரல் பிளவு காயம் மட்டுமே என்றும், விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதியில் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சாதாரண காயம் என்பதால் விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியில் அக்சர் படேல் பங்கேற்பதில் பெரிய சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. ஒருவேளை அவர் இரண்டாவது போட்டியின் போது மட்டும் ஓய்வு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் முக்கிய வீரரான அவருக்குப் பெரிய காயம் ஏற்படாதது இந்திய அணி நிர்வாகத்திற்கு நிம்மதியை அளித்துள்ளது.