புனே : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் டி20 உலக கோப்பை நாயகன் அக்சர் பட்டேல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ரவீந்திர ஜடேஜாவை போலவே இடது கை சுழற்பந்து வீச்சாளராக அக்சர் பட்டேல் இருந்தாலும் பேட்டிங்கில் வல்லவராக இருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற துலீப் கோப்பையில் கூட பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் பட்டையைக் கிளப்பினார். முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள், 2வது இன்னிங்சில் 28 ரன்களும் எடுத்த அக்சர் பட்டேல் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த நிலையில் அக்சர் பட்டேல் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் சேர்க்கப்பட்டும் அவருக்கு ப்ளெயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவரை 14 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அக்சர் பட்டேல் 55 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். தன்னுடைய 14 டெஸ்ட் போட்டிகளிலே ஐந்து முறை ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்திருக்கிறார்.

பேட்டிங்கிளும் நான்கு அரை சதம் அடித்திருக்கிறார். இதனால் அக்சர் பட்டேலுக்கு தான் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்படவே இல்லை. அக்சர்பட்டேலை விட குல்தீப்க்கு முக்கியத்துவம் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது. இந்த சூழலில் அக்சபட்டேல் அணியில் இருந்தும் ரஞ்சி கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தரை உடனடியாக இந்திய அணியில் குல்தீப்க்கு பதிலாக கம்பீர் சேர்த்து இருக்கிறார்.

இதற்கு காரணம் சொல்லும் கம்பீர் நியூசிலாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிக அளவு இருப்பதால், ஆப் ஸ்பின்னர் தேவை என்ற அடிப்படையில் வாஷிங்டன் சுந்தரை சேர்த்ததாக கூறுகிறார். மேலும் இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது பந்து அவர்களை விட்டு நகர்ந்து செல்லும் வகையில் வீசப்பட வேண்டும்.
இதன் மூலம் விக்கெட்டுகள் கிடைக்கும் என்றும் கம்பீர் கூறி இருக்கிறார். இது ஒரு அளவு சரியான விஷயம் என்றாலும் அக்சர் பட்டேலின் முக்கியத்துவத்தை இந்திய அணி நிர்வாகம் குறைத்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.