பெங்களூர் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும்.
இல்லையென்றால் நியூசிலாந்து தொடரில் எத்தனை போட்டிகளில் இந்தியா டிரா அல்லது தோல்வியை தழுவுகிறதோ அதே அளவிலான போட்டிகளில் ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது சுலபமான காரியம் கிடையாது. இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றால் கூட அது மிகப்பெரிய சாதனையாக தான் கருதப்படும். ஏனென்றால் இந்திய அணியில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் புஜாரா, ரகானே போன்றவர்கள் இம்முறை இல்லை.
அதனால் இளம் வீரர்களை வைத்து ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது என்பது எல்லாம் பகல் கனவாக தான் இருக்கும்.இதனால்தான் ரோகித் சர்மா இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இருந்தார்.
இதனால் தான் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டும் கூட வெற்றியை பெறவேண்டும் என இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆல் அவுட்டானது.
எனினும், தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி வருகிறது. நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் முடிவைக் கொண்டு வர இந்தியாவும் நியூசிலாந்தும் முயற்சி செய்து வருகிறது. இதில் இந்திய அணி தற்போது நியூசிலாந்தை விட 200 ரன்கள் கூடுதலாக அடித்துவிட்டு பின் நியூசிலாந்தின் பத்து விக்கெட் எடுக்க தீவிரம் காட்டி வந்தது.
இந்த தருணத்தில் தான் தற்போது பெங்களூரில் மழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் உத்வேகம் நிலை குலைந்து இருக்கிறது. தற்போது நியூசிலாந்தை விட 12 ரன்கள் தான் இந்திய அணி பின்தங்கி இருக்கிறது. சர்பராஸ்,பண்ட் ஆகியோர் அபாரமாக விளையாடி வந்த நிலையில் தற்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டு இருக்கிறது.
இதனால் இந்தியாவின் ரன் குவிக்கும் வேகமும் பாதிக்கப்படும். ஆடுகள சூழலும் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற வாய்ப்பு இருக்கிறது. பெங்களூர் டெஸ்டில் இந்தியா தோல்வியை தழுவினாலோ இல்லை சமனில் முடிந்தாலோ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இந்தியாவுக்கு ஏற்படும்.