வதோதரா: "எங்கள் வீரர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை.. டி20 உலகக்கோப்பைக்கு வரமாட்டோம்" என்று வங்கதேச கிரிக்கெட் வாரியமும் (BCB), வங்கதேச அரசும் ஒருபக்கம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் வங்கதேசத்தைச் சேர்ந்த நடுவர் ஒருவர், ஜாலியாக இந்தியாவில் நடந்த இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் போட்டியில் நடுவராகப் பணியாற்றி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், கள நடுவராகச் செயல்பட்டவர் யார் தெரியுமா? வங்கதேசத்தைச் சேர்ந்த ஷர்புத் தௌலா இப்னே ஷாகித் சைகத் (Sharfuddoula Ibne Shahid Saikat).

இவர் வங்கதேசத்தில் இருந்து ஐசிசி எலைட் பேனலுக்கு தேர்வான முதல் நடுவர் என்ற பெருமைக்குரியவர். ஆஷஸ் உள்ளிட்ட பெரிய தொடர்களில் நடுவராக இருந்தவர். அவர் தற்போது இந்தியாவில் தங்கி, இந்தியா-நியூசிலாந்து தொடருக்கு நடுவராக செயல்பட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்புதான், ஐபிஎல் 2026 தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. இதனால் கடுப்பான வங்கதேச கிரிக்கெட் வாரியம், "எங்கள் வீரர்களை அவமதித்துவிட்டார்கள்" என்று கொந்தளித்தது.
அதோடு நிற்காமல், "இந்தியாவில் அரசியல் மற்றும் சமூகச் சூழல் சரியில்லை. அதனால் 2026 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க எங்கள் வீரர்கள் இந்தியா செல்ல மாட்டார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக எங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும்" என்று ஐசிசி-யிடம் புகார் மனு அளித்தது. வங்கதேச அரசு ஐபிஎல் ஒளிபரப்புக்கும் தடை விதித்தது.
இப்போது கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வி என்னவென்றால், "வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்தியாவில், உங்கள் நாட்டு அம்பயருக்கு மட்டும் எப்படிப் பாதுகாப்பு இருக்கிறது?" என்பதுதான். அப்படி என்றால் இந்தியாவில் வங்கதேசத்தவர்களுக்கு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்பது தானே உண்மை.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நடுவர் துறைத் தலைவர் இப்திகார் ரஹ்மான், ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், "ஷர்புத் தௌலா எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. அவர் ஐசிசி ஒப்பந்தத்தில் (ICC Contract) உள்ள நடுவர். ஐசிசி அவருக்கு எங்கே பணி வழங்குகிறதோ, அங்கு அவர் சென்றே தீர வேண்டும். அவர் இந்தியா செல்வதற்கு எங்களிடம் தடையில்லாச் சான்று கேட்க வேண்டிய அவசியமில்லை. ஐசிசி அழைத்தால், அவர் தானாகவே எங்களிடமிருந்து விடுவிக்கப்படுவார். அவரைத் தடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை" என்று கையை விரித்துள்ளார்.
பிப்ரவரி 7-ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்குகிறது. அட்டவணைப்படி வங்கதேசம் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட வேண்டும். ஆனால், அவர்கள் அடம்பிடிப்பதால் ஐசிசி இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
வங்கதேச நடுவர் எவ்வித பயமும் இன்றி, வதோதராவில் மிகவும் "கூலாக" நடுவர் பணியைச் செய்து வருகிறார். இதிலிருந்து, "பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்று வங்கதேச வாரியம் சொல்வது சும்மா ஒரு அரசியல் நாடகம் என்பதும், முஸ்தபிசுர் ரஹ்மான் விவகாரத்தில்தான் அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. வீரர்களுக்கு ஒரு நியாயம்.. நடுவருக்கு ஒரு நியாயமா? என ரசிகர்கள் வங்கதேச வாரியத்தைக் கிண்டலடித்து வருகின்றனர்.