மும்பை: தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்து, 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்து இருக்கும் நிலையில் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு ஒன்றை போட்டுள்ளது.
இந்த தொடரின் மூன்றாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன் இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த ஓய்வை ரத்து செய்து இருக்கிறது பிசிசிஐ. மேலும், இரண்டு நாட்கள் நடக்க உள்ள வலைப் பயிற்சியில் ஒரு வீரர் தவறாமல் அனைவரும் நிச்சயம் பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருக்கிறது.

இதற்கு முன் இந்திய அணியின் வலைப் பயிற்சியில் மூத்த வீரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் விரும்பினால் வலைப் பயிற்சியில் பங்கேற்கலாம் அல்லது ஓய்வு எடுக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. அந்த நடைமுறையை மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ரத்து செய்து இருக்கிறது பிசிசிஐ.
இவை அனைத்தும் வாய்மொழி உத்தரவாக கூறப்பட்டு இருப்பதாக இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எனினும், அதே போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்து மோசமான முதல் இன்னிங்ஸ் செயல்பாட்டை சமாளித்தது இந்திய அணி.
அந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்களை சந்திக்க முடியாமல் திணறியதோடு முதலில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 359 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதல் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்களையும், இரண்டாவது போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்களையும் சந்திக்க இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. எனவே, இரண்டு நாட்கள் வலைப் பயிற்சியை இந்திய வீரர்கள் கடுமையாக பயிற்சி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.