மும்பை: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடருக்கான அணியில் நான்கு ரிசர்வ் வீரர்கள் சேர்க்கப்பட்டிருப்பது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. உள்ளூர் டெஸ்ட் தொடருக்கு 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்த பின் எதற்கு நான்கு ரிசர்வ் வீரர்கள்?
2020 - 21 நடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது நடந்த சம்பவம் தான் இத்தனை ரிசர்வ் வீரர்களை இப்போது அறிவிக்க காரணம் என கூறப்படுகிறது. 2020 - 21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் இந்திய அணி ரிசர்வ் வீரர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று இருந்தது.

அந்த தொடரின் இடையே பல வீரர்கள் பல்வேறு காரணங்களால் அணியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது நவ்தீப் சைனி மற்றும் நடராஜன் ஆகிய இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்தியது. அவர்கள் இருவருக்கும் அதற்கு முன் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கூட இருக்கவில்லை.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் அணி மற்றும் டி20 அணிக்காக அவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள். ஆனால், அவர்களை வைத்தே கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அதிலும் பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி போட்டியில் நடராஜன் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
எந்த உள்ளூர் டெஸ்ட் போட்டி அனுபவம் கூட இல்லாத அவரால் எப்படி சிறப்பாக செயல்பட முடிந்தது? என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. ஆஸ்திரேலிய அணியினர் எப்போதும் எதிரணியின் பந்து வீச்சாளர்களை எப்படி சமாளிப்பது என திட்டமிட்டு போட்டியில் பேட்டிங் செய்வார்கள். ஆனால், அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர் ஒருவரை பயன்படுத்தும் போது அவர் எப்படி வந்து விசுவார்? என அவர்களால் எளிதாக கணிக்க முடியாது.
அதை வைத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அதே போன்ற ஒரு விஷயத்தை இப்போதும் செய்ய வேண்டும் என்ற முடிவிலேயே ஹர்ஷித் ரானா, மயங்க் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய நான்கு ரிசர்வ் வீரர்களை அறிவித்துள்ளது பிசிசிஐ.
இதில் பிரசித் கிருஷ்ணாவுக்கு மட்டுமே சர்வதேச அனுபவம் ஓரளவு உள்ளது. மற்ற மூவரில் மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் தான் சர்வதேச அறிமுகத்தை பெற்று இருக்கிறார்கள். அவர்கள் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் போதும் ரிசர்வ் வீரர்களாகவே இருப்பார்கள்.
அவர்களுக்கு போதிய அனுபவம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ஐந்து போட்டிகளில் இந்திய அணி விளையாடும். அப்போது சில பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்படலாம். முகமது ஷமி இன்னும் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தயாராகாத நிலையில் வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் முகமது சிராஜ் மட்டுமே செயல்பட உள்ளனர்.
மூன்றாவது பந்து வீச்சாளராக வங்கதேச டெஸ்ட் தொடரில் ஆகாஷ் தீப் செயல்பட்டு இருந்தார். அவரே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளார். எனினும், இந்த மூன்று பந்துவீச்சாளர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வி உள்ளது. அந்த இடத்தில் தான் இந்த ரிசர்வ் வீரர்களை பயன்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இது ஒரு வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு சவாலாகவும் அமையும் என இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது.