வதோரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் திரும்பி இருக்கிறார். வதோராவில் நடைபெறும் இந்த முதல் ஒரு நாள் போட்டியில் மாலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் டாஸ் வென்ற கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கில், உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் இருக்கின்றது. இருக்கும் போட்டிகளில் வித்தியாசமான காம்பினேஷன்களை வைத்து வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது.

மாலை நேரத்தில் போகப் போக பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என்று நினைக்கின்றேன். அணியில் இருக்கும் பலவீரர்கள் விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் விளையாடி அனுபவம் பெற்று இருக்கிறார்கள். எங்கள் அணியில் இன்று ஆறு பவுலர்களை தேர்வு செய்து இருக்கின்றோம். இதில் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகிய மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் வேகப்பந்துவீச்சாளராக செயல்பட உள்ளனர் என்றும் கில் அறிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் மைக்கேல் பிரேஸ்வல், நாங்கள் முதலில் பந்து வீச தான் முடிவெடுத்து இருந்தோம். ஆனால் பரவாயில்லை பேட்டிங் முதலில் செய்வதும் மகிழ்ச்சி தான்.
நாங்கள் இந்தியாவிற்கு சில நாட்களுக்கு முன்பே வந்து நல்ல பயிற்சியை பெற்றோம். எங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய தொடர் நியூசிலாந்து அணிக்காக எந்த போட்டிகளில் விளையாடினாலும், அது மிகப்பெரிய கௌரவம் தான். அதுவும் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது.
அதற்கு முன்பு இந்த தொடரில் விளையாடுவது உண்மையிலே சாதகமான விஷயம். எங்கள் அணியில் பல புதுமுக வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். சிலர் இந்தியாவில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். பலருக்கு அந்த அனுபவம் இல்லை. எங்கள் அணியில் இன்று கிறிஸ்டின் கிளார்க் அறிமுகமாகிறார். இதேபோன்று ஆதித்யா அசோக் எங்கள் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருப்பார்கள் என்று மைக்கேல் பிரேஸ்வல் தெரிவித்துள்ளார்.
வதோராவில் இதுவரை ஆறு லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றிருக்கிறது. இதில் அனைத்துமே இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியை வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோன்று இந்தியாவில் இரு அணிகளும் 40 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் மோதியுள்ளனர். இதில் இந்தியா 31 முறையும், நியூசிலாந்து அணி எட்டு முறையும் ஒரு போட்டி மழையாலும் ரத்தாகி இருக்கிறது.