மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக டாஸ் விழுந்து இருக்கின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது.
இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதுவரை இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது கிடையாது என்பதால் உத்வேகத்துடன் களமிறங்கியுள்ளது. இந்த சூழலில் டாஸ் வென்ற கேப்டன் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நியூசிலாந்து அணி எங்களுக்கு மிகப்பெரிய சவால்களை கொடுத்து நெருக்கடிக்கு உண்டாக்கி இருக்கிறது. எனினும் இதுபோன்ற சூழலை தான் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் விரும்புகிறார்கள். இதை தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இன்றைய ஆட்டத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்று நான் எண்ண வில்லை.
எனினும் முதலில் பந்து வீசி நியூசிலாந்தை ஒரு இலக்கில் கட்டுப்படுத்தி அதனை ஷேஸ் செய்ய நாங்கள் விரும்புகின்றோம். கடந்த போட்டியில் பந்துவீச்சில் நாங்கள் சில தவறுகளை செய்து விட்டோம். நடு ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்காமல் விட்டு விட்டோம். அந்த ஒரு இடத்தில் மட்டும் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். இன்றைய அணியில் பிரசித் கிருஷ்ணா விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக ஆர்ஸ்தீப் சிங் சேர்த்திருக்கின்றோம் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் மைக்கேல் பிரேஸ்வல் தற்போது முதலில் பேட்டிங் செய்வதால் நாங்கள் பெரிய இலக்கை நிர்ணயிக்க முயற்சி செய்வோம். உண்மையிலே இது எதிர்பார்ப்பை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்திய மண்ணில் முதல் ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன் என மைக்கேல் பிரேசில் தெரிவித்துள்ளார்.