தரம்சாலா : நியூசிலாந்து அணியின் மிகவும் ஆபத்தான வீரராக கருதப்படும் டெவான் கான்வே விக்கெட்டை இந்தியா அற்புதமாக வீழ்த்தியது.
ஒன்பது பந்துகளை சந்தித்த கான்வே ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

கான்வேவின் பலவீனத்தை கணித்து சரியாக திட்டமிட்ட பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் சேர்ந்தே அவரது விக்கெட்டை எடுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே - வில் யங் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
கான்வே அதிரடி வீரர். அவரை 10 - 15 ஓவர்களுக்கு மேல் களத்தில் நிற்க விட்டால் அதிரடியாக ரன் குவித்து எதிரணியை நிலைகுலைய வைத்துவிடுவார். அவரு விரைவாக வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தது இந்திய அணி.
பும்ரா வீசிய முதல் ஓவரை கான்வே சந்தித்தார். அந்த ஓவரில் கான்வே ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. பிட்ச்சில் பந்து ஸ்லோவாக வந்ததால் கான்வே பந்தை சந்திக்க தடுமாறினார். மறுபுறம் பும்ரா பந்தை ஸ்விங் செய்தார். அதனால், முதல் ஓவர் மெய்டனாக மாறியது. கான்வே ஆறு பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்கவில்லை.
அடுத்து சிராஜ் வீசிய இரண்டாவது ஓவர் முழுவதும் வில் யங் சந்தித்தார். பின் பும்ரா வீசிய மூன்றாவது ஓவரையும் வில் யங் முழுவதுமாக சந்தித்தார். பின் நான்காவது ஓவரை சிராஜ் வீச வந்த போது கான்வே அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்தார். முதல் இரண்டு பந்துகளில் அவரால் ரன் எடுக்க முடியவில்லை.

தொடர்ந்து எட்டு பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்க முடியாத அழுத்தத்தில் இருந்த கான்வே ஸ்டம்ப்புக்கு நேராக வந்த மூன்றாவது பந்தை அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை கேட்ச் பிடிக்க, கான்வே ஒன்பது பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.
பும்ரா வீசிய மெய்டன் ஓவரும், அதைத் தொடர்ந்து சரியான லென்த்தில் சிராஜ் வீசிய பந்தும் தான் கான்வே விக்கெட்டுக்கு முக்கிய காரணம். சரியாக திட்டமிட்டு ஆபத்தான வீரரை டக் அவுட் ஆக்கி அனுப்பியது இந்திய அணி.