நியூசிலாந்து முடிவு
இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் போட்டியிலும் அந்த அணி முதலில் பேட்டிங் செய்து தோல்வி அடைந்த நிலையில், அதே முடிவை எடுத்தது.
மார்டின் கப்தில் அதிரடி
துவக்கத்தில் மார்டின் கப்தில் அதிரடியால் அந்த அணி அதிக ரன்களை குவித்து வந்தது. ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஜடேஜா அடுத்தடுத்த ஓவர்களில் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். ஷமி, பும்ரா கட்டுக் கோப்பாக பந்து வீசினர்.
நிதான பேட்டிங்
அதிரடி வீரரான ராஸ் டெய்லர் இந்தப் போட்டியில் படு நிதானமாக பேட்டிங் செய்து வந்தார். அவரால் எத்தனை முயன்றும் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. கடந்த போட்டியில் அவர் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேட்ச் கொடுத்த டெய்லர்
18வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை சந்தித்த டெய்லர் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார். மூன்றாவது பந்தை அவர் தூக்கி அடித்தார். பந்து நேராக விராட் கோலி வசம் வந்தது. இது கொஞ்சம் எளிய கேட்ச் தான்.
அதிர்ச்சி அடைந்த பும்ரா
ஆனால், அந்த எளிய கேட்ச்சை நழுவ விட்டார் கேப்டன் கோலி. இதே போட்டியில் முன்னதாக இரண்டு அற்புதமான கேட்ச்களை பிடித்த கோலி, இந்த எளிய கேட்ச்சை நழுவ விட்டதை பும்ராவால் நம்ப முடியாமல் வாயை மூடிக் கொண்டு தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
கோலியின் கோபம்
கேட்ச்சை நழுவ விட்ட கோபத்தில் பந்தை எடுத்த கோலி, வேகமாக விக்கெட் கீப்பர் ராகுலுக்கு மேலே செல்லும் வகையில் வீசினார். பந்து ராகுலை கடந்து சென்றது. பின்னர் பந்து பவுண்டரி செல்லாமல் தடுக்கப்பட்டது. அதனால், மேலும் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படாமல் போனது.
காரணம் என்ன?
கோலி இந்த கேட்ச்சை பிடிக்க வரும் போதே அவுட் என்ற கொண்டாட்டத்தை செய்யவும் தயார் ஆனார். அதனால் தான் கேட்ச் நழுவிப் போனது என சில ரசிகர்கள் இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். சிலர் நிதான ஆட்டம் ஆடிய டெய்லர் விக்கெட்டை எடுக்காமல் இருப்பதே இந்தியாவுக்கு சாதகமான விஷயம் என இதை கேலியாகவும் எடுத்துக் கொண்டனர்.
ராஸ் டெய்லர் விக்கெட்
பின்னர் ராஸ் டெய்லர் அதே பும்ரா பந்துவீச்சில் 20வது ஓவரில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு 133 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அபார ஆட்டம்
இந்திய அணியில் ராகுல் 57*, ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். ரோஹித் சர்மா 8, விராட் கோலி 11 ரன்களில் இந்தப் போட்டியில் ஆட்டமிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், ராகுல், ஸ்ரேயாஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
தொடரில் முன்னிலை
இந்த டி20 தொடரில் இந்திய அணி 2 - 0 என முன்னிலையில் உள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ளன. அதில் ஒரு போட்டியில் வென்றாலும் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும். நியூசிலாந்து அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.