இரண்டாவது ஒருநாள் போட்டி
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 273 ரன்கள் குவித்தது. இடையே அந்த அணி விரைவாக விக்கெட்களை இழந்த போதும், சமாளித்து ரன் குவித்தது.
இந்தியா தோல்வி
இந்தப் போட்டியில் இந்திய அணி 251 ரன்கள் மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா அரைசதம் அடித்தது மட்டுமே ஒரே ஆறுதல் தரும் விஷயமாக இருந்தது.
நியூசிலாந்து பேட்டிங்
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது துவக்க வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் விக்கெட்டின் போது சர்ச்சை எழுந்தது. கேப்டன் கோலி, அம்பயருடன் விதிமீறல் ஒன்று குறித்து வாக்குவாதம் செய்தார். அதனால், போட்டியில் பரபரப்பு எழுந்தது.
ஹென்றி நிக்கோல்ஸ் விக்கெட்
ஹென்றி நிக்கோல்ஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில், சாஹல் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். முதலில் சாஹல், நிக்கோல்ஸ் காலில் பந்து பட்டவுடன் அம்பயரிடம் அவுட் கேட்டார். அம்பயர் அவுட் கொடுத்தார். எனினும், நிக்கோல்ஸ் ரிவ்யூ கேட்க முடிவு செய்தார்.
நேரம் கடந்தது
டிஆர்எஸ் ரிவ்யூ கேட்க 15 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கும் மேல் ஆனால், ரிவ்யூ கேட்க முடியாது. ஆனால், நிக்கோல்ஸ் 15 வினாடிகள் முடிந்த பின்னரே ரிவ்யூ கேட்டார். விதிப்படி அம்பயர் இந்த ரிவ்யூவை அனுமதித்து இருக்கக் கூடாது.
ஏற்றுக் கொண்ட அம்பயர்
ஆனால், அம்பயர் ப்ரூஸ் ஆக்ஸன்போர்டு நிக்கோல்ஸ் ரிவ்யூவை ஏற்றுக் கொண்டார். ரிவ்யூவில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. மேலும், பந்து ஸ்டம்பில் படுவதும் தெரிந்தது. அது அவுட் தான் என்பதால் மூன்றாவது அம்பயர், கள அம்பயரின் முடிவுக்கே அதை விட்டு விட்டார்.
விராட் கோலி கோபம்
நேரம் முடிந்த பின் கேட்கப்பட்ட இந்த ரிவ்யூவை அம்பயர் ஏற்றுக் கொண்டதை கண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி இதற்கு தன் எதிர்ப்பை தெரிவித்தார். கள அம்பயருடன் அவர் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால், சிறிய பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கல் இல்லை
ஹென்றி நிக்கோல்ஸ் நேரம் தாழ்த்தி ரிவ்யூ கேட்டாலும், அவர் அவுட் தான் என மீண்டும் தீர்ப்பு வந்ததால், சர்ச்சை ஏற்படாமல் இந்த விவகாரம் முடிந்தது. ஒருவேளை அவர் அவுட் இல்லை என தீர்ப்பு கிடைத்து இருந்தால், அது சரியான தீர்ப்பாக இருந்து இருந்தாலும், விதிப்படி அவர் ரிவ்யூ கேட்டு இருக்க முடியாது என்பதை கோலி சர்ச்சையாக மாற்றி இருக்கக் கூடும்.
நியூசிலாந்து ரன் குவிப்பு
இந்தப் போட்டியில் இந்திய அணி மத்திய ஓவர்களில் சிறப்பாக விக்கெட் வீழ்த்தியது, ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 197 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சொதப்பிய இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணற, நியூசிலாந்து அணி 273 ரன்கள் குவித்தது.
பேட்டிங் மோசம்
அடுத்து சேஸிங் செய்த இந்திய அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது. ரோஹித், தவான் இல்லாத நிலையில், துவக்க வீரர்கள் ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஏமாற்றினர். கோலி 15 ரன்களில் அவுட் ஆனார். ராகுல், ஜாதவ்வும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனார்கள். ஜடேஜா கடைசி நேரத்தில் அரைசதம் அடித்து வெற்றிக்கு அருகே அணியை அழைத்துச் சென்றார். இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.