புனே: இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2 - 0 என நியூசிலாந்து அணி வென்று இருக்கிறது. இந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் எப்படி இந்திய அணியை வீழ்த்தினோம்? என விவரித்து இருக்கிறார். "இந்தியாவில் முதல் அடியை நாங்கள் கொடுக்க வேண்டும் என நினைத்தோம். அதை செய்து இருக்கிறோம்" எனக் கூறி இருக்கிறார்.
மேலும், இரண்டு போட்டிகளிலும் டாஸ் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருந்ததாகவும், அதுவே வெற்றிக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் அன்று போட்டி தொடங்கியது. அப்போது இரண்டு அணிகளும் பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச் என்பதால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தன.

அப்போது, இந்திய அணி டாஸ் வென்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதை பயன்படுத்தி நியூஸிலாந்து அணி இந்தியாவை 46 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அந்தப் போட்டியின் போது டாம் லாதம் தான் டாஸ் வென்று இருந்தாலும் பேட்டிங் தான் தேர்வு செய்து இருப்பேன் என்றார்.
அந்த வகையில் அந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக மாறியது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே
வில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் இரண்டாவது நாள் முதல் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என்பதால் முதலில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது.
இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் டாஸ் வென்றார். அவர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன் மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் அன்று முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி சுழற் பந்துவீச்சில் சிக்கி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆக, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணிக்கு டாஸ் முடிவு சாதகமாக அமைந்தது.
இந்த இரண்டு போட்டிகளிலும் டாஸ் முடிவுகள் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருந்தன. அதை டாம் லாதம் சுட்டிக் காட்டி இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "நாங்கள் இந்திய அணிக்கு முதல் அடியை கொடுக்க வேண்டும் என நினைத்து ஆடினோம். மேலும், இரண்டு டாஸ் முடிவிலும் நாங்கள் சரியான இடத்தில் இருந்தோம். அதுதான் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம்." என்றார்.
மேலும், "நாங்கள் இந்திய அணிக்கு எதிராக போட்டி போட்டு ஆட வேண்டும். முதல் அடியை நாம் தரவேண்டும் என்று நினைத்தோம். அதை இரண்டு போட்டியிலுமே செய்து இருக்கிறோம். முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்து வீச்சில் அதை செய்தோம். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் அதை செய்தோம். முதல் இன்னிங்ஸில் அதிக ரன் குவிப்பது மிகவும் முக்கியம். அதை இரண்டு போட்டிகளிலும் நாங்கள் செய்தோம்." என்று வெற்றிக்கான காரணத்தை டாப் லாதம் குறிப்பிட்டார்.