துபாய்: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அதிக ரன் குவித்த வீரருக்கு கோல்டன் பேட் விருதும், அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரருக்கு கோல்டன் பால் விருதும் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் நேற்று நடந்து முடிந்த சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் அந்த இரண்டு விருதுகளும் வழங்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஐசிசி மீது அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, அந்தத் தொடரில் அதிக ரன் குவித்த வீரருக்கு கோல்டன் பேட் விருதும், அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரருக்கு கோல்டன் பால் விருதும் வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியில் யார் அந்த விருதுகளை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை வென்று இருந்தாலும், இந்த முறை கோல்டன் பேட் மற்றும் கோல்டன் பால் ஆகிய இரண்டு விருதுகளுக்கான இடத்தை நியூசிலாந்து வீரர்களே கைப்பற்றி இருந்தனர். ஆனால், அவர்களுக்கு அந்த விருது வழங்கப்படவே இல்லை. அந்த விருதுக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது சர்ச்சையாகவும் மாறி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் அந்த விருதுகளை வழங்குவதற்கு பணம் இல்லையா? என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். இந்த முறை சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா நான்கு இன்னிங்ஸ்களில் 263 ரன்கள் குவித்து இருக்கிறார். இவரே அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார்.
மறுபுறம் நான்கு போட்டிகளில் 10 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி. இவர்தான் இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக இருக்கிறார். இந்திய வீரர்கள் இந்த இரண்டு பட்டியலிலும் இரண்டாவது இடத்தை மட்டுமே பிடித்துள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்து இன்னிங்ஸ்களில் 243 ரன்கள் சேர்த்திருக்கிறார் வருண் சக்ரவர்த்தி மூன்று இன்னிங்ஸ்களில் 9 விக்கெட்களையும், முகமது ஷமி ஐந்து இன்னிங்ஸ்களில் 9 விக்கெட்களையும் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளனர். எனவே, இந்திய வீரர்களுக்கு இந்த முறை கோல்டன் பேட் மற்றும் கோல்டன் பால் வெல்வதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலை இருந்தது.
ஆனால், இறுதியில் அப்படி ஒரு விருதே வழங்கப்படவில்லை. சாம்பியன்ஸ் ட்ராபி என்றாலே கோல்டன் பேட் மற்றும் கோல்டன் பால் போன்றவை தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளை அளிக்கும். இதுவரை எந்தெந்த வீரர்கள் அவற்றை வென்றார்கள் என மீள்பார்வை செய்து பார்க்கும் போது அவர்களுக்கு அதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்.
ஆனால், இந்த முறை அது போன்ற ஒரு விஷயத்தை சர்வதேச கிரிக்கெட் அமைப்பு நடத்தாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூசிலாந்து வீரர்கள் அதை வென்று விட்டார்கள், இந்திய வீரர்கள் வெல்லவில்லை என்பதால் அந்த விருதுகள் வழங்கப்படவில்லை என சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால், அது போன்ற காரணங்கள் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இது பற்றி ஐசிசி விளக்கம் அளிக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.