துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சொதப்பியதை அடுத்து இந்திய அணியால் 250 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேலும், பின்வரிசையில் ஹர்திக் பாண்டியா ஆடிய ஆட்டத்தால் இந்திய அணி 249 ரன்களை எடுத்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றுப்போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் மூன்று முக்கிய விக்கெட்டுகள் 30 ரன்களுக்குள் விழுந்தது. சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.

அதன் பின் இந்திய அணி ஆமை வேகத்தில் ரன் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினாலும் நிதானமாகவே ரன் சேர்த்தனர். அக்சர் படேல் தனது பணியை சிறப்பாக செய்து 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து ஆறாம் வரிசையில் இறங்கிய கே.எல். ராகுல் 23 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பின் ஏழாம் வரிசையில் இறங்கிய ஹர்திக் பாண்டியா மற்றும் எட்டாம் வரிசையில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா இணைந்து அதிரடி ஆட்டம் ஆடுவார்கள், அணியின் ஸ்கோர் வேகமாக உயரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
ஆனால் அவர்கள் இருவரும் நிதானமாகவே ஆடினார்கள். ரவீந்திர ஜடேஜா 20 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து 46-வது ஓவரில் ஆட்டம் இழந்தார். கே.எல். ராகுல் ஆட்டம் இழந்ததை அடுத்து கடைசி நான்கு அல்லது ஐந்து ஓவர்களில் விரைவாக ரன் சேர்க்கலாம் என்ற திட்டமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா சேர்ந்து ஆடிய 47-வது ஓவரில் இரண்டு ரன்களும், 48வது ஓவரில் நான்கு ரன்களும் மட்டுமே கிடைத்தன. 49வது ஓவரில் ஹர்திக் பாண்டியா இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் இந்திய அணிக்கு 15 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் மூன்றாவது பந்திலேயே ஆட்டம் இழந்தார். அவர் 45 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து இருந்தார்.
கடைசி பந்தில் ஷமியும் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் மட்டுமே எடுத்தது. 250 ரன்கள் கூட எட்ட முடியாமல் இந்திய அணி திணறியது. இந்த ஸ்கோர் மட்டுமே நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற போதுமா? என்பதே தற்போதைய மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. மாட் ஹென்றி 5 விக்கெட்களை வீழ்த்தினார். கேப்டன் மிட்செல் சான்ட்னர் கட்டுக்கோப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 41 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஜேமிசன் 8 ஓவர்களில் 31 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். வில்லியம் ஓ'ரூர்க், ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.