துபாய்: இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் அனுபவ வீரரான விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் செய்த சொதப்பல்கள் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளன. அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது கேன் வில்லியம்சன் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை கே.எல். ராகுல் நழுவவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஒருவேளை அந்த கேட்சுகளை கே.எல். ராகுல் பிடித்திருந்தால், நியூசிலாந்து அணியால் 200 ரன்களைக் கூட எட்டி இருக்க முடியாது. 150 ரன்களில் நியூசிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கும் என சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 249 ரன்கள் எடுத்தது. அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, கேன் வில்லியம்சன் மட்டுமே சிறப்பாக விளையாடி 81 ரன்கள் சேர்த்தார். அவர் பேட்டிங் செய்தபோது 17 ரன்களில் ஒரு கேட்ச் வாய்ப்பு கொடுத்தார். அது விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலின் கைகளில் பட்டு நழுவிச் சென்றது.
அடுத்து கேன் வில்லியம்சன் 38 ரன்கள் அடித்திருந்தபோது மற்றொரு வாய்ப்பை அளித்தார். 35வது ஓவரில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் அந்த வாய்ப்பு கிடைத்தது. அது சற்று கடினமானது தான். என்றாலும், போட்டி சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அந்த கேட்சை கே.எல். ராகுல் பிடித்திருந்தால், ஆட்டமே மாறி இருக்கும். ஆனால், அவர் அதை நழுவ விட்டார்.
அப்போது விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். அவர்கள் ராகுலிடம் இது பற்றி பேசியிருந்தனர். இதை சுட்டிக்காட்டி தான் தற்போது ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆட வைக்க வேண்டும் எனவும், கே.எல். ராகுலை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
தற்போது ராகுல் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்கிறார். அது அவருக்கு சாதகமான பேட்டிங் வரிசை அல்ல. எனினும், அணிக்காக அவர் அதை செய்கிறார். அதில் அவரால் ரன் குவிக்க முடியவில்லை. இதுவும் ஒரு விமர்சனமாக மாறி உள்ளது.
அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் விளையாட உள்ள நிலையில், ரிஷப் பண்ட்டை அணியில் சேர்ப்பது என்பது கடினமான முடிவாகவே இருக்கும். அந்த முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுக்காது என்றே தெரிகிறது.