துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி, எந்த பந்துவீச்சாளரும் இந்திய அணிக்கு எதிராக செய்யாத முக்கிய சாதனையை நிகழ்த்தினார்.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே இதற்குமுன் இந்திய அணிக்கு எதிராக எந்த வேகப்பந்துவீச்சாளரும் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தியதில்லை. முதன்முறையாக அந்த சாதனையை செய்து இருக்கிறார் மேட் ஹென்றி.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மூன்றாவது ஓவரிலேயே அதிர்ச்சி அளிக்கும் விதமாக சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார் மேட் ஹென்றி. சுப்மன் கில் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின் விராட் கோலி விக்கெட்டையும் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார் மேட் ஹென்றி. பின்னர் பின்வரிசை பேட்ஸ்மேன்களான ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோரையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். அவர் எட்டு ஓவர்கள் பந்து வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இது நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் இரண்டாவது சிறந்த செயல்பாடாகும்.
இதற்கு முன் ஜேக்கப் ஓரம் 2004 ஆம் ஆண்டு அமெரிக்க அணிக்கு எதிராக 36 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதைத் தவிர்த்து சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இத்தனை ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக எந்த வேகப்பந்துவீச்சாளரும் ஐந்து விக்கெட் வீழ்த்தாமல் இருந்தனர். தற்போது அந்த சாதனையை மேட் ஹென்றி உடைத்து இருக்கிறார்.
இதே சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அஸ்மதுல்லா ஓமர்ஜாய் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதுவே இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் வீழ்த்தப்பட்ட ஐந்து விக்கெட்களாகும்.
இன்னும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபியில் எந்த வேகப்பந்துவீச்சாளரும் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியதில்லை. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் மட்டுமே எடுத்தது.