துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு இருக்கிறார். அவர் அபாரமாக விளையாடி 98 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
ரோஹித் சர்மா 15 ரன்களிலும், சுப்மன் கில் 2 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 30 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்களையும் இழந்தது. இந்த இக்கட்டான நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர்.

அக்சர் படேல் 42 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் மிக நிதானமாக ஆடத் துவங்கி பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை ஆடினார். அவர் 75 பந்துகளில் அரை சதம் அடித்தார். பின்னர் 98 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.
ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எப்போதும் சிக்கல் ஏற்படுத்தி வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். சமீப காலத்தில் இந்திய அணியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக எந்த பேட்ஸ்மேனும் ஆடாத ஆட்டத்தை ஸ்ரேயாஸ் ஐயர் ஆடி வருகிறார்.
இதுவரை ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 9 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். அதில் 8 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 563 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் அடங்கும். அதாவது 8 இன்னிங்ஸில் ஆறு முறை 50 ரன்கள் அல்லது அதற்கு மேல் ரன் குவித்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் அவரது பேட்டிங் சராசரி 70.37 என்பதாக உள்ளது. மேலும், ஸ்ட்ரைக் ரேட் 100.71 என்பதாக உள்ளது. அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் மிக சிறப்பான செயல்பாட்டை வைத்துள்ளார். மற்ற எந்த அணிகளை விடவும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அவரது பேட்டிங் சராசரி அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்கும் போது இந்திய அணியின் ஸ்கோர் 172 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்பதாக இருந்தது. 30 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்து 172 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற அளவு இந்திய அணியை எடுத்து சென்றிருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.