துபாய்: இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தபோது ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 98 பந்துகளை சந்தித்து 79 ரன்கள் சேர்த்தார்.
அதன் மூலம் இந்திய அணி 249 ரன்கள் எடுத்தது. அடுத்து நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.

இது பற்றி ராபின் உத்தப்பா பேசுகையில், "ஸ்ரேயாஸ் ஐயர் அழுத்தமான சூழ்நிலையில் பேட்டிங் செய்தார் என்பதை விட, அவர் எப்படி அதை செய்தார், எப்படி அந்த அழுத்தத்தை எதிர்கொண்டார் என்பதுதான் மிகவும் முக்கியம். அவர் மொத்த அழுத்தத்தையும் உள்வாங்கிக் கொண்டார். அக்சர் படேலுடன் இணைந்து முன்னணியில் நின்று பேட்டிங்கை எடுத்துச் சென்றார். 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த பின்னர் எப்படி அழுத்தத்தை உள்வாங்க வேண்டுமோ அதை சரியாக செய்தார். இப்போதாவது அவருக்குத் தேவையான கவனத்தை நாம் அளிக்க வேண்டும்," என்றார்.
அம்பத்தி ராயுடு ஸ்ரேயாஸ் பற்றி பேசுகையில், "நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஏன் முக்கியம் என்பதை ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் நமக்கு உணர்த்துகிறது. டாப் ஆர்டர் சரியாக விளையாடாத போது ஸ்ரேயாஸ் போன்ற ஒரு வீரர் இப்படி ஒரு இன்னிங்ஸ் ஆடி இருக்கிறார். குறிப்பாக பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் இதுபோல ஆடியிருப்பது சிறப்பானது. இதனால்தான் ஒரு நாள் போட்டிகளில் நான்காம் வரிசை மற்றும் ஐந்தாம் வரிசை வீரர்கள் மிகவும் முக்கியமானவர்கள்."
"அக்சர் படேலுடன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து ஆடியது அற்புதமாக இருந்தது. அவரது ஆட்டம் நம்ப முடியாதது. அவர் நான்காம் வரிசையில் சாம்பியன் வீரராக இருக்கிறார். ஆனால் அவரைப் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அவர் இந்த இந்திய அணியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்" என்றார் அம்பத்தி ராயுடு.
ஆகாஷ் சோப்ரா ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் பற்றி பேசுகையில், "ஸ்ரேயாஸ் ஐயர் தனது பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்தார். அணியிலிருந்து நீக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இத்தனையும் அவருக்கு எதிராக இருந்தது. ஆனால், இதற்குப் பின்னரும் அவர் தனது கவனத்தை செலுத்தி இந்திய அணிக்கு மீண்டு வந்து தொடர்ந்து ரன் குவிப்பது சிறப்பானது. இதற்காக அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்," என்றார்.