துபாய்: இந்திய அணிக்கு எதிரான தோல்வியை ஏற்க முடியாமல் சாதாரண ஒரு விஷயத்தை ஊதி பெரிதாக்க முயன்றிருக்கிறார் முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய குரூப் ஏ பிரிவு போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துக்கு 250 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.
நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி வந்தார். மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்து வந்தன. அதனால் நியூசிலாந்து அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரவீந்திர ஜடேஜா முக்கிய விக்கெட்டான டாம் லாத்தமை வீழ்த்தினார்.

33-வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை டாம் லாத்தம் சரியாக விளையாட தவறவிட்டார். பந்து அவரது காலில் பட்டது. இதை எடுத்து ரவீந்திர ஜடேஜா உற்சாக மிகுதியில் அம்பயரிடம் முறையிட்டார். அப்போது ஜடேஜா பிட்ச்சில் நின்றிருந்தார். எனினும், அவர் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை. பந்து வீசிய வேகத்தில் உடனடியாக அவுட் கேட்க வேண்டும் என்ற அவசரத்தில் அவர் பிட்ச்சின் மீது நின்று அவுட் கேட்டார்.
ஆனால், ஜடேஜா பிட்ச்சை சேதப்படுத்துகிறார், இதை அம்பயர் எச்சரிக்க வேண்டும் என சைமன் டவுல் இதை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்ற முயன்றிருக்கிறார். இது பற்றி அவர் நேரலையில் பேசுகையில், "ஜடேஜா செய்ததை பாருங்கள்.. இதை ஏற்கவே முடியாது. அவர் பிட்ச்சில் நடந்ததற்கு அம்பயர் அவரை எச்சரிக்க வேண்டும்" என்றார்.
பொதுவாக பந்து வீச்சாளர்கள் பிட்ச்சின் மீது அடிக்கடி நடந்து சென்றாலோ, ஓடினாலோ தான் அம்பயர்கள் எச்சரிப்பார்கள். மேலும், ஒரு வீரர் வேண்டுமென்றே அதை செய்கிறாரா அல்லது விக்கெட் கேட்பது போன்ற உற்சாக மிகுதியான நிகழ்வுகளின் போது அதை செய்கிறாரா என்பதையெல்லாம் பார்த்து தான் அம்பயர் எச்சரிக்கை விடுப்பார்.
ஒருவேளை இது குறித்து அம்பயர் ஜடேஜாவிடம் லேசாக பேசி இருக்கலாம். எனினும், இதை ஒரு பெரிய விஷயமாக சைமன் டவுல் விமர்சனம் செய்து இருக்கிறார். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களும், அக்சர் படேல் 42 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் மட்டுமே சிறப்பாக விளையாடினார். அவர் 81 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 30 ரன்களைக் கூட தாண்டவில்லை.