துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாயில், ஒரே மைதானத்தில் அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருவதை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் நாசிர் ஹுசைன் மற்றும் மைக்கேல் ஆதெர்டன் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தனர்.
அதற்கு சுனில் கவாஸ்கர் கடுமையான பதிலடி அளித்திருக்கிறார். "அவர்களுக்கு சம்பளம் கிடைப்பது இந்திய கிரிக்கெட்டால்தான். அவர்கள் என்ன புலம்பினாலும், புலம்பி விட்டுப் போகட்டும். அதெல்லாம் இங்கு ஒரு விஷயமே இல்லை" என கடுமையாக சாடி இருக்கிறார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது போட்டிகள் அனைத்தையும் துபாயில் விளையாடி வருகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்றால், அந்தப் போட்டிகளும் துபாய் மைதானத்தில் தான் நடைபெறும். இதுதான் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி உலகின் பணக்கார கிரிக்கெட் அணியாக இருப்பதால் இது போன்ற முக்கியத்துவத்தை பெறுவதாக சலசலப்பு எழுந்துள்ளது. முன்னாள் இங்கிலாந்து வீரர்களின் விமர்சனத்துக்கு பதிலளித்து இருக்கும் சுனில் கவாஸ்கர், "இது பற்றி எல்லாம் நாம் பேச வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் எப்போதும் புலம்பிக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்."
"கிரிக்கெட்டின் தரம், வருமானம், திறமை மற்றும் முக்கியமாக வருவாய் ஈட்டும் வாய்ப்பு ஆகியவற்றில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டுக்கு இந்தியா தொலைக்காட்சி உரிமம் மற்றும் ஊடக வருவாய் வழியாக எத்தனை பெரிய பங்காற்றுகிறது என்பதை எல்லாம் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய சம்பளம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா என்ன பங்காற்றுகிறது என்பதை பொறுத்தே அமைகிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்."
"அவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த புத்திசாலிகள். உங்கள் அணி ஏன் சாம்பியன்ஸ் டிராபியில் அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை என்பதை பற்றி நீங்கள் நினைத்தீர்களா? அதைத்தான் உங்களிடம் நான் கேட்பேன். எப்போதும் இந்தியா மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்கள் நாட்டு அணி (இங்கிலாந்து) என்ன செய்கிறது என்பதை பாருங்கள்."
"உங்கள் நாட்டு வீரர்கள் வெற்றியை பற்றி கவலைப்படும் நிலையிலேயே இல்லை. அவர்கள் வேறு ஏதோ ஒரு எதிர்பார்ப்பை வைத்து ஆடுகிறார்கள். முதலில் போட்டியின் முடிவை பற்றி அக்கறை இருக்க வேண்டும். உங்கள் நாட்டு அணிக்காக நீங்கள் ஆடும்போது மிகவும் கவனமாக ஆட வேண்டும்."
"ஆனால், தங்கள் அணியை பற்றி யோசிக்காமல் எப்போதும் அவர்கள், "இந்தியா இதை பெற்றிருக்கிறது, அதை பெற்று இருக்கிறது" என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இது எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கும். இதை எல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் புலம்பினால் புலம்பட்டும், நாம் நமது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.