துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவரை அணியில் தேர்வு செய்வது குறித்து பல்வேறு விவாதங்களும் நடந்து வந்த நிலையில், அவருக்கு பரிசோதனை முயற்சியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருண் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது பேட்டிங் செய்ய கடினமான சூழ்நிலையில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அடுத்து நியூசிலாந்து அணி 250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் சேர்த்தார். ஆனால், அவருடன் எந்த பேட்ஸ்மேனும் ஒத்துழைத்து கூட்டணி அமைத்து ஆடவில்லை. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி பத்து ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். இதை அடுத்து நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு வருண் சக்கரவர்த்தி காரணமாகி இருக்கிறார். இதை அடுத்து அவருக்கான முக்கியத்துவம் இந்திய ஒருநாள் அணியில் அதிகரித்து இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அணியில் வருண் சக்கரவர்த்தி ஐந்தாவது சுழற்பந்துவீச்சாளராக சேர்க்கப்பட்டிருந்தார். அதை பலரும் அப்போது விமர்சித்திருந்தனர்.
"எதற்காக இந்திய அணியில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள், 4 பேர் போதுமானது" என்றும் கூறினார்கள். இந்த நிலையில்தான் வருண் சக்கரவர்த்திக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடனும், இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுடனும் ஆடியது.
ஆனால் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பளிக்க வேண்டி அதிரடியான முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. இரண்டாவது வேகப்பந்துவீச்சாளரான ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நான்காவது சுழற்பந்துவீச்சாளராக பிளேயிங் லெவனில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்திருந்தார்.
இந்திய அணி தனது போட்டிகளை துபாய் மைதானத்தில் விளையாடி வரும் நிலையில் இங்கு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்பதை இந்திய அணி பயன்படுத்த முடிவு செய்து இவ்வாறு நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை களம் இறக்கியது. ஆனால், இது ஆபத்தாக முடியவும் வாய்ப்பு இருந்தது.
அப்படி நடக்காமல் மிகச்சிறப்பாக இந்திய அணியின் திட்டத்தை முடித்து கொடுத்து இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி. இந்த போட்டியில் இந்திய அணியில் ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா சேர்ந்து எட்டு ஓவர்களை மட்டுமே வீசி இருந்தனர். அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தங்களின் 10 ஓவர்களையும் முழுமையாக வீசி இருந்தனர்.
குல்தீப் யாதவ் 9.3 ஓவர்களும், ரவீந்திர ஜடேஜா எட்டு ஓவர்களையும் வீசி இருந்தனர். இதில் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்களையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா, அக்சர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.