துபாய்: வருண் சக்கரவர்த்தி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட் வீழ்த்தினார், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆனால் அவர் ஃபீல்டிங் செய்த போது செய்த மிகப்பெரிய தவறு ஒன்று விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் ஃபீல்டிங்கில் பலவீனமாக இருக்கிறார் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான குரூப் சுற்றுப்போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 4வது ஓவரில் வில் யங் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். பந்து மிட்-ஆன் திசையில் சென்றது. வருண் சக்கரவர்த்தி பந்தை கேட்ச் பிடிப்பதற்காக ஓடினார். ஆனால், அவர் கேட்ச் பிடிக்க முயன்ற முறை சரியானதாக இல்லை.

பந்து விரல் நுனியில் பட்டு கீழே விழுந்தது. கேட்ச் வாய்ப்பு நழுவிப் போனது மட்டுமின்றி, வருண் சக்கரவர்த்தி ஓடி வந்த வேகத்தில் கீழே விழுந்த பந்தை எட்டி உதைத்தார். பந்து பவுண்டரியையும் அடைந்தது. ஒரே நேரத்தில் கேட்ச் வாய்ப்பையும் தவற விட்டு நியூசிலாந்து அணிக்கு நான்கு ரன்களையும் விட்டுக் கொடுத்தார். அது கடினமான கேட்ச் வாய்ப்பு தான். வருண் அதை ஊகித்து பந்தை ஃபீல்டிங் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி இருக்கலாம். அங்குதான் தவறு நடந்தது.
நியூசிலாந்து அணியின் சேஸிங்கில் 4வது ஓவரிலேயே வருண் செய்த சொதப்பலை பார்த்து விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வாயடைத்துப் போனார்கள். ஹர்திக் பாண்டியா தலையில் கை வைத்து அதிர்ச்சியுடன் நின்று இருந்தார், ரவீந்திர ஜடேஜாவும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். விராட் கோலி வாயில் கைகளை வைத்து பொத்திக்கொண்டு இது மிகப்பெரிய தவறு என்பதை உணர்த்தினார்.
கேப்டன் ரோஹித் சர்மாவும் அதிருப்தியுடன் இருந்தார். பின்னர் தனது தவறை தனது பந்துவீச்சின் மூலம் வருண் சரி கட்டியதால் இது பெரிய விவகாரமாக மாறவில்லை. நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது. ஒருவேளை இது நெருக்கமாக செல்லும் போட்டியாக இருந்திருந்தால், வருண் சக்கரவர்த்தி செய்த அந்தத் தவறு இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கக் கூடும்.
அடுத்து இந்திய அணி அரையிறுதி போட்டியில் விளையாட உள்ள நிலையில், வருண் சக்கரவர்த்தி இதுபோன்ற சிறிய தவறுகளை செய்ததை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுத்தும். குறிப்பாக அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளும் நிலையில், இந்திய அணி ஒவ்வொரு ரன்னையும் கவனமாக பாதுகாக்க வேண்டும்.