துபாய்: இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலி, அக்சர் படேலின் காலை தொட்டு வணங்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 249 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அப்போது அக்சர் படேல் சிறப்பாக விளையாடி 42 ரன்கள் எடுத்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்து 79 ரன்கள் சேர்த்தார். அதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது. இது சிறிய ஸ்கோர் தான் என்றாலும், துபாய் ஆடுகளம் மந்தமாக இருந்ததால் இந்திய அணி இதை வைத்து சமாளிக்கலாம் என்ற நிலை இருந்தது.
ஆனால், நியூசிலாந்து அணியில் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார். அவர் அரை சதம் அடித்து 80 ரன்களை எட்டி இருந்தார். மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் வில்லியம்சனின் ஆட்டம் இந்திய அணிக்கு அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது.
அப்போது அக்சர் படேல் வீசிய பந்தில் கேன் வில்லியம்சன் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அவர் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அத்துடன் நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
அப்போது, அக்சர் படேல் இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதால் விராட் கோலி வேகமாக வந்து அக்சர் படேலின் காலைத் தொட முயன்றார். ஆனால், அக்சர் படேல் உடனடியாக சிரித்துக்கொண்டே பின்வாங்கி விட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.