துபாய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா - வில் யங் இணைந்து வரலாற்று சாதனையை செய்தனர். தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு எதிராக எந்த அணியும் செய்யாத சாதனையை அவர்கள் நிகழ்த்தினர்.
மேலும் நியூசிலாந்து அணிக்காக ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் அதிக ரன்களைச் சேர்த்த துவக்க ஜோடியாகவும் சாதனை படைத்தனர். 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து சிறப்பான துவக்கம் அளித்தனர்.

ரச்சின் ரவீந்திரா வரிசையாக பவுண்டரிகளை அடித்தார், ஒரு சிக்ஸரும் அடித்தார். அவர் 29 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். வில் யங் நிதானமாக ஆடிய நிலையில் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது முதல் விக்கெட்டுக்கு நியூசிலாந்து அணி 57 ரன்கள் சேர்த்து இருந்தது.
ஐசிசி நாக்கவுட் போட்டிகள் வரலாற்றிலேயே இதுவே நியூசிலாந்து அணியின் துவக்க ஜோடி எடுத்த இரண்டாவது சிறந்த கூட்டணி ரன்கள் ஆகும். 2015 உலகக்கோப்பை அரையிறுதியில் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் மார்ட்டின் கப்தில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து இருந்தனர். ஆனால் அது அரையிறுதிப் போட்டி ஆகும்.
தற்போது முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க ஜோடி ரச்சின் - வில் யங் 50 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை சேர்த்துள்ளனர். மேலும், இந்தத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த ஜோடி என்ற சாதனையும் நிகழ்த்தப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை நடந்த நான்கு போட்டிகளிலும் எந்த ஒரு அணியின் துவக்க ஜோடியும் இந்திய அணிக்கு எதிராக 50 ரன்களுக்கு அதிகமாக சேர்த்ததில்லை. இந்த வகையில் ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் இறுதிப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர்.
எனினும் அவர்களின் விக்கெட்டுகள் சரிந்த பின்னர் நியூசிலாந்து அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. கேன் வில்லியம்சன் 11 ரன்களிலும், டாம் லாதம் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.