மிரட்டல் பந்துவீச்சு
இந்திய அணியின் பந்துவீச்சு துவக்கத்தில் மிரட்டலாக இருந்தது. பும்ரா, புவனேஸ்வர் குமார் கூட்டணி நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களை ஸ்தம்பிக்க வைத்தது. துவக்க வீரர் மார்டின் குப்டில் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் பத்து ஓவர்களில் நியூசிலாந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. எல்லாம் இந்திய அணிக்கு சாதகமாக சென்று கொண்டு இருந்தது.
பண்டியா காயம்
16வது ஓவரை பண்டியா வீசினார். அது அவர் வீசிய நான்காவது ஓவர். அந்த ஓவரின் நான்காவது பந்துக்கு பின், அவர் வலியால் பந்துவீச்சை நிறுத்தினார். தினேஷ் கார்த்திக் அவரிடம் என்ன ஆனது என கேட்டார். அவருக்கு இடுப்புப் பகுதியில் வலி இருந்ததை அடுத்து முதல் உதவி அளிக்கப்பட்டது.
பந்துவீச்சில் குழப்பம்
அந்த ஓவரின் இரண்டு பந்துகளை வீசி முடித்த பின் பண்டியா மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால், ரசிகர்கள் பரபரப்பு அடைந்தனர். இந்திய அணி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு களமிறங்கியதை அடுத்து, யார் பகுதி நேரமாக பந்து வீசுவார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டது.
மீண்டும் வந்த பண்டியா
20வது ஓவரின் முடிவில் பண்டியா மீண்டும் களத்துக்கு வந்தார். ஆனால், அவரின் உடல் மொழி அவர் இன்னும் வலியோடு இருப்பதை உணர்த்தியது. அவர் வீசி முடிக்க வேண்டிய ஆறு ஓவர்கள் மீதமிருந்தன. பின்னர் 27வது ஓவர் முதல் மீண்டும் பந்து வீசத் துவங்கினார் பண்டியா.
சமாளித்த கோலி
தினேஷ் கார்த்திக்கை நீக்கி விட்டு, இந்திய அணியில் கூடுதல் பந்துவீச்சாளர்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கருத்து கூறிய நிலையில், கோலி ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு அரையிறுதியில் களமிறங்கினார். தான் செய்த தவறை சமாளிக்க, வலியுடன் பண்டியாவை பந்து வீசச் செய்தார். பண்டியா முழு உடற்தகுதியுடன் இல்லாத நிலையில் சரியாக பேட்டிங் செய்வாரா? இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அவரால் அந்தப் போட்டியில் விளையாட முடியுமா? என தெரியவில்லை.